வாழத் துடிக்கும் ஈழத்தமிழர்
(பேராசிரியர் அறிவரசன்)
இன்னும் சிங்களக் கொடியரின் உள்ளம்
இரங்கிட வில்லை நெடுநாளாய்
வன்னிமு காமில் பல்லா யிரம்பேர்
வருத்தும் பசியால் வாடுகிறார்
துன்பமே செய்யும் நோய்களை உடனே
துடைத்திட மருத்துவம் ஏதுமின்றி
இன்னலால் வாடி இளைக்கிறார் அவர்தம்
இடரினைக் களைய எழுந்திடுவோம்
வெளியே செல்லென முகாமி லிருந்து
விரட்டப் பட்டோர் தங்குவதற்கு
வழியே இன்றி வாழிடம் இன்றி
வாட்டும் பசியுடன் மரத்தடியில்
விழியில் கொட்டும் நீருடன் வாழ்வை
வெறுத்து நிற்கிறார் அவர்வாழ
வழிசெய் வதுநம் கடமை அன்றோ
வள்ளல்க ளாவோம் தோழர்களே!
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடிய வள்ளலார் வழியினிலே
நீடிய பசியால் நெடியதீப் பிணிகளால்
நினைப்பருந் துயரால் நிலைகுலைந்து
வாடியே நிற்கும் ஈழத் தமிழரின்
வாட்டம் போக்கிடத் தோழர்களே!
நாடியே வருக இயன்றவா றெல்லாம்
நல்லன செய்து நலஞ்சேர்ப்போம்
வாழத் துடிக்கும் ஈழத் தமிழர்
வாட்டம் போக்கிட முயலாமல்
நீளப் பேசிக் காலம் போக்கி
நிற்கிறோம் வறிதே; உறவுகளாம்
ஈழத் தமிழரின் இன்னலை அறிந்தபின்
என்னுளம் கலங்கி அழுகின்றேன்
தோழர்க ளே!அவர் துயரினைக் களையத்
தொடங்குவோம் பணியைத் தொடர்ந்திடுவோம்
Tuesday, October 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment