மீனவத் தமிழனுக்கு விடியல் வருமோ?
(பேராசிரியர் அறிவரசன்)
ஆழ்கடலில் மீன்பிடிக்க அருந்தமிழர் படகில்
அலைகின்றார்; அடைகரையில் அவர்பெண்டு பிள்ளை
வாழ்கின்றார்; கடல்சென்ற மறத்தமிழர் திரும்பி
வந்தாலே வாழ்வுண்டு எனநம்பு கின்றார்;
வீழ்கின்றார் எந்தமிழ் மீனவர்கள் தீய
வெறிகொண்டு திரிகின்ற சிங்களரால்; இங்கே
ஆழ்கின்றார் துயர்கடலில் குடும்பத்தார் நாளும்
அழுகின்றார் அவர்கண்ணீர் ஆழ்கடலைச் சேரும்.
பலநூறு மீனவர்கள் கொலைசெய்யப் பட்டார்;
பாவியராம் சிங்களர்தாம் ஈவிரக்க மின்றி
வலையறுத்தும் மீன்பறித்தும் படகுகளை உடைத்தும்
வருத்தமுறச் செய்கின்றார்; வாழவழி யின்றி
நிலைகுலைந்து நிற்கின்ற மீனவரைக் காக்கும்
நினைப்பின்றித் தில்லியிலும் சென்னையிலும் ஆள்வோர்
தலைதிருப்பி நிற்கின்றார்; கொடுமையிலும் கொடுமை
தனியினமோ கரையோர மீனவர்கள்? அவரும்
தமிழனமே என்பதைநாம் மறந்துவிட லாமோ?
இனுணர்வுத் தமிழரெல்லாம், மீனவரை வருத்தும்
இடர்களைய ஒருங்கிணைந்து கிளர்ந்திடவேண் டாமோ?
மனிதநேய மில்லாத வன்முறைச்சிங் களரால்
வாடுகின்ற மீனவராம் தமிழர்களைக் காக்க
இனிமேலும் தயங்காமல் எழுந்துகளம் காண்போம்
இனஉணர்வுக் கிலக்கணத்தை எழுதிடுவோம் வாரீர்!!!
Tuesday, October 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment