நலிந்து வாடும் நந்தமிழ் உறவுகள்?
(பேராசிரியர் அறிவரசன்)
என்னதான் தவறு செய்தனர் தமிழர்?
எங்கள் உரிமை வேண்டுமெனச்
சொன்னது தவறோ? தொல்லைதாங் காமல்
துடித்தெழுந் ததுவும் தவறாமோ?
வன்முறை யாளராம் சிங்களர் கொடுமையால்
மாண்புசேர் ஈழத் தமிழரெலாம்
பன்னலம் இழந்து படுதுயர் உழந்து
பாழ்பட நிற்கிறார் ஈழத்தில்
கைகளை இழந்தும் கால்களை இழந்தும்
கண்களை இழந்தும் காப்பதற்கு
மெய்வகை உறவோர் யாருமில் லாமல்
வீழ்ந்து கிடக்கிறார்; உயிர்வாழச்
செய்வகை ஈதெனத் தெரியா தவராய்த்
திகைத்துச் சாவை எதிர்நோக்கி
அய்யகோ நந்தமிழ் உறவுகள் அங்கே
அழுது புலம்பித் தவிக்கின்றார்
கல்வி இருந்தும் கைத்திறம் இருந்தும்
கடுமையாய் உழைக்க மனமிருந்தும்
அல்லற் படுந்தமிழ் ஈழத் தார்க்கென
ஆரும் இல்லை வேலைதர
பல்வகைத் திறமையும் பாழ்பட, அவர்தாம்
பசியினைத் தணிக்கக் கடும்வெயிலில்
கல்லுடைக் கின்றார் அதுவும் இன்றிக்
கழிக்கின்றார் பலநாள் கவலையிலே
அல்லற் படுவோர் தம்மைக் காக்க
அணிதிரண் டெழுவோம்; ஈழத்தில்
தொல்லைப் படுவோர்க் குதவிட இன்றே
துடிப்புடன் எழுவோம்; துயர்க்கடலில்
தள்ளப் பட்டநம் உறவுகள் வாழத்
தயக்கம் இன்றி உதவிடுவோம்
நல்லறம் மாந்த நேயமே வாழ்வில்
நலிந்தோர்க் குதவுதல் கடமையன்றோ?
Tuesday, October 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment