Tuesday, April 13, 2010

விடுதலைபுரம் (காப்பியம்) இயல் - 3 தமிழர் திருவிழா

மன்னா               உலகில்             மகளிர்             ஆடவர்
என்னும்             வேற்றுமை     இயற்கை;       அதன்மேல்
ஆணுக்               குயர்வும்          பெண்ணுக்      கிழிவும்
பேணல்              மடமை             பெரியோர்      உடன்படார்
எனும்பே            ரறம்திகழ்         இன்றமிழ்       நாட்டில்               5

மநுவின்             பெயரால்         வந்து               நுழைந்த
வடவா                ரியத்தை,         மயங்கிய      தமிழர்
மடமை               மீதுற                 வணங்கி       ஏற்றனர்;
ஆணுக்               குயர்வும்          பெண்ணுக்   கிழிவும்
பேணல்              அறமெனப்      பேசிய           மநுவின்            10
நெறியில்           ஆடவர்              மகளிர்க்      கிருந்த
உரிமை               பறித்தே            அடிமை         யாக்கினர்;
தந்தைக்              கடிமை               தலைவற்      கடிமை
மைந்தர்க்           கடிமை               என்றவர்க்     குரிமை
மறுக்கப்              பட்டது;  மநுவை  மீறினால்   15
ஒறுக்கப்             பட்டனர்;  ஒருபாற் கோடிக்
கற்பும்                  கைம்மையும்    காரிகை    யர்க்கெலாம்
பொற்பெனச்     சொல்லிப் பொய்ம்மை  நாட்டினர்;
பவள                    வாயினள்  பன்மலர்க்  கொடியனாள்
துவளும்             இடையினள்  தோகை  மயிலனாள் 20
கனியிதழ்           பிறைநுதல்  கயல்விழி  ஆடவர்க்(கு)
இனியவள்          மனைவிளக்(கு)  என்றெலாம் எழுந்த
புனைந்துரை      யாலும்  புகழுரை  யாலும்
நனைந்து             மயங்கி  நலிந்த  மகளிரின்
உரிமை                 மீட்கவும் உயர்வு நல்கவும்  25
அடிமைத்             தளையை  அறுத்துக்  களையவும்
இத்தமிழ்              நாட்டில்  எழுந்தார்   பெரியார்
முத்து                    லட்சுமி  அம்மையும்   முனைந்தார்
புரட்சிக்                கவிஞரும் போர்க்குரல்  எழுப்பினார்
மருட்சி                 நீங்கி  மங்கையர்   எழுந்தனர்  30
நங்கையர்           கூடி நாவலூர்க் கண்ணும்
மங்கையர்          உரிமை மன்றம் கண்டனர்
மன்றத்                 தலைவர் வளர்மதி அம்மையாம்
ஒன்றிச்               செயல்பட உமாஅ  ராணியாம்
உமாஅ                 ராணி பிறமொழி யாதலால்   35
அமைவாய்        தமிழில் அறிவர  சியெனும்
பெயரால்            அறியப் பெற்றவள்; தமிழர்
உயர்வுக்             காக உவப்புடன்  உழைப்பவள்
மங்கையர்         கூடிப்  பொங்கும்  உணர்வுடன்
திங்கள்                இறுதியில், சிறப்புடன்  ஒருநாள்   40
தமிழர்                  திருவிழாக்  காண விழைந்தனர்
அமைவுறத்       திட்டம்  அளித்தனள்  அரசி
விருப்புடன்       அரசி விளம்பிய  தேற்றுச்
சிறப்புரை           யாற்றத்  திருமாற  னாரும்
சீரிய                     தமிழினம்  சிறக்கும்  வழிசொல    45
மாரி                      யப்பனும்   வருதல்  நலமாம்
என்று                   திட்டம் ஏற்புற  இயற்றினர்
மன்றத்                திடலில்  வகுத்த நாளில்
செந்தமிழ்          ஆர்வலர்  திருவிழாக்  காண
வந்து                   கூடினர்;  வளர்மதி  தலைமை 
உரையினை     முடித்தபின் உணர்ச்சியின் வடிவாய்
அரசி                    எழுந்தே அமைவுற மொழிந்தனள்;
"மன்றத்              தலைவர் வளர்மதி தமக்கும்
செந்தமிழ்க்      காவலர்  திருமாற  னார்க்கும்
அறிவாம்          அரசியை  அகத்தில்  இருத்தி   55
உரிமை              வேட்கையும்   உளத்தில்  கொண்டு
சீருடைக்           கொள்கைச் செம்மலாய்த் திகழும்
மாரி                    யப்பர் தமக்கும் பிறர்க்கும்
வணக்கம்        சொல்லிநான்  வடித்த  கவிதையை
எனக்குத்          தெரிந்தவா றியம்புவேன்  கேளீர்",   60
         (வேறு)
  "பெண்ணுக்கு விடுதலை  வேண்டும் - உரிமை
பேணக்  கருதும்  பெரியீர் உணர்க
மண்ணுக்கும் விடுதலை வேண்டும் - தமிழ்
மறவரே எழுக மாண்பயன்  அறிக

ஆரிய வலைவீச்சி னாலே - நம்
அறிவொடு மானமும் பறிபோன(து) அன்று
சீரிய பகுத்தறி வாலே - நமைச்
சேர்ந்த  காரிருள் விலகிடல்  நன்று

சாதியும் மதமும் துறப்போம் - ஆரியச்
சதியினால் நேர்ந்த பழியினைத் துடைப்போம்
தீதிலாப் புதியராய்ப் பிறப்போம் - பெரியார்
தெளிவுடன் காட்டிய வழியினில் நடப்போம்"
           (வேறு)
இன்னவா(று) அரசி இன்றமிழ்க் கவிதை
சொன்னதைத்  தொடர்ந்து  துய தமிழில்
கூரிய அறிவுக் கொள்ளிட  மான
மாரி யப்பன் வந்து முழங்கினன்.
அற்றைச் சிறப்பும் அயலார் விளைத்த  65
இற்றைச் சிறுமையும் எடுத்துரை செய்தபின்,
"வீழ்ந்த தமிழினம் விழிப்புற் றெழுக
சூழ்ந்த பகையைத் தூளதூ ளாக்குக
அருமைத் தமிழரே அறிவைப் பெருக்குக
உரிமைப் போரை உடனே தொடங்குக     70
ஆற்றல் மறவரே அணிவக்த்  திடுக
வேற்றுமை நமக்குள் வேண்டாம் விலக்குக
ஓரினம் நாமென உணர்க" என உணர்ச்சியால்
மாரி யப்பன்  வகுத்துரை செய்தபின்,
தொன்மைச் சிறப்பைத் தொலைத்து விட்டு   75
நன்மை தீமை நாடி நன்மையைப்
போற்றத் தவறிப் பொல்லாப் பகையின்
ஆற்றற்(கு)  அழிந்தும் அறியா மையெனும்
தீமையில் வீழ்ந்தும்  திகைத்துத் திணறி
ஊமையர் ஆகி ஒடுங்கிய தமிழரின்   80
மடமை நீக்கும் மாண்புறு செயலைக்
கடமையாக்  கொண்டு காவல் செய்த
பெரியார் நெறியில் பிறழாச் சிறப்புடைத்
திருமாறனார்தாம்  சிறப்புரை நிகழ்த்தினர்;
"நான்தமிழ் இனத்தன் நாமெலாம் ஓரினம்  85
தேன்தமிழ் நம்மொழி எனுஞ்சிறப் போடு
வாழும் நம்மிடை  மாற்றார்  வகுத்த
பாழும் சாதிப் பகுப்பெலாம் எதற்காம்?
தகுதிக் குறைவால் தாழ்ந்தவன் என்றும்
மிகுதியால் உயர்ந்தவன் என்றும் விளம்பல்  90
நேரிதே  ஆயினும், நேர்ந்த  பிறப்பே
சீரிய தகுதியாம்  என்றும் மேல்கீழ்ப்
பிறப்பும் முன்னைப் பிறப்பின்  ஊழ்வினைத்
திறத்தால்  நிகழும் என்றும்  கிளத்தல்
ஆரியர்  என்னும்  பூரியர் கருத்தே;        95
கூரறிவு உடையநம்  கொளகைக்  கேற்பதோ?
எண்ணுக  தோழரே? தோழியீர் !  எண்ணுக
உண்மையில்  விடுதலை  உற்றதோ நம்மை?
அருமைப் பெரியீர் ! அறிகநம் தமிழினப்
பெருமை;   என்றும்  பேணுக இனநலம்   100
சென்ற  காலம்  சிறப்பு மிக்கதாம்
இன்று நம்மை இழிவு சூழ்ந்த்தே
ஓங்கி  யிருந்த(து)  உரிமை அந்நாள்
ஏங்கி   நிற்கிறோம்  எதிர்பார்த்(து)  இந்நாள்
இந்நிலை  நம்நிலை  என்பதை  உணர்ந்தவர் 105
நம்மிடைச் சிலரே;  நம்மூட் பலர்தாம்
உண்டு களிப்பதும் உடுத்துக் களிப்பதும்
கண்டு களிப்பதும் காட்சி யளிப்பதும்
மட்டுமே  வாழ்வாய்  மானம்  இழந்து
மொட்டை  மரமெனப்  பட்டழி  கின்றனர்   110
ஆட்சி  இழந்தோம்  அடிமைப் பட்டோம்
மாட்சி  இழந்தோம்  மானமும்  இழந்தோம்
ஓரின  மாயநாம் கூறு பட்டு
வேறுவே  றாக  வெண்திரை  நடிகர்தம்
பின்னே  சென்று  பெரும்பிழை  செய்வதும்  115
இன்னுயிர்  அவர்க்கே ஈவோம்  என்பதும்
நேரிதோ?  சொல்வீர் !  நிகழ்கா  லத்தில்
சீரினை  இழந்து  செந்தமி ழன்னை
வடிக்கும்  கண்ணீர்   துடைக்கவேண்  டாமோ?
துடிக்கும் ஏழையர்  துயரினைப் போக்க  120
ஏற்ற   வழிகளில்  இயங்கவேண்  டாமோ?
மாற்றம்  இங்கு  மலர  வேண்டாமோ?
மகளிரை ஆடவர்  வருத்தி  அடக்குதல்
தகவோ?             உரிமை                தரவேண்        டாமோ?
எண்ணுக!         இன்றே                 அறிவியக்      கத்தில்    125
ஒன்றுக!            பகையை             வென்றிடு      வோம்" எனச்
சீர்சால்              மாறனார்              தெளிவரை    நிகழ்த்தப்
போர்செய        விரும்பும்             பொங்கிய      உணர்வுடன்
சென்றனர்       தமிழர்                    திருவிழா
நன்றே              நிறைந்தது           நாவலூர்        அகத்தென்.  130

No comments:

Post a Comment