Tuesday, June 22, 2010

இயல் - 30

விடுதலைபுரம் தோற்றம்

பேரொளிப் பகலவன், பெரியார் போலக்
காரிருள் நீக்கிடக் காலை மலர்ந்தது
சேரியர் என்னும் சிறுமையின் நீங்கிச்
சீரியர் ஆகிய சிறப்பினர் அனைவரும்
முந்திய இரவில் மூதறி வாளராம் 5
சிந்தனை சிறந்த திருமாற னார்தம்
அறிவுரை ஏற்று, அவலமே விளைத்த
நெறியாம் சாதி மதங்களின் நீங்கிய
திறத்தினை எண்ணியும் அதனால் சேர்ந்த
சிறப்பினை நினைந்தும், சிந்தை மகிழ்ந்து, 10
விடுதலை புரத்தின் விரிந்த திடலில்
நடைபெற விருக்கும் நன்மண விழாவினை
எண்ணிக் களிப்புடன் இருந்த வேளையில்,
முன்னாள் நிலக்கிழார், முகத்தில் பொலிவொடும்
வந்து நின்று மற்றையோர் துணையுடன் 15
பந்தல் அமைக்கும் பணியினைத் தொடங்கினர்;
நண்பகற் பொழுது நண்ணு முன்னம்
எண்ணிய வாறே எல்லாச் சிறப்பும்
உடைய பந்தலும் ஒலிபெருக் கிகளும்
திடலில் அமைத்துத் திரும்பினர் பெருமாள்; 20
மேலை வானில் ஞாயிறு படூஉம்
மாலைப் பொழுதும் வந்தது; மகிழ்வின்
எல்லை கண்டவர் இவர்தாம் என்று
சொல்லத் தக்க துடிப்புடன் திடலில்
இருவேறு பாலருள் இளையரும் முதியரும் 25
திருவிழாச் சிறப்பினைச் சிந்தையில் தேக்கி
வந்து கூடினர்; மாத்தமிழ்க் கவிஞன்
செந்தமிழ்த் தலைவரின் சிறப்பினைச் சொன்ன,
"தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும் 30
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்" என்னும் பாடல்
செவிகளை நிறைக்கச் சிலிர்த்து நின்றோர்
அனைவரும் பெரியார் ஆற்றிய தொண்டினை 35
நினைவில் நிறுத்தி நெஞ்சக மெல்லாம்
பொங்கி நின்ற போதில், ஓர்இளைஞர்
மேடை ஏறி விழிப்பினை நல்கும்
பாடலை இசையுடன் பாங்குறப் பாடினர்

(வேறு)
மடமையை நீக்கிடும் வழியொன் றிருக்குது
வாருஙுகள் தோழர்களே! - நம்மை
வாட்டிடும் தொல்லைகள் தீர்த்திட ஒன்றாய்ச்
சேருங்கள் தோழர்களே (மடமையை)

பகுத்திறி வாளராம் பெரியார் காட்டிய
பாதையிலே செல்லுவோம் - மூடப்
பழக்க வழக்கங்கள் தீமைகள் அனைத்தையும்
பகுத்தறிவால் வெல்லுவோம் (மடமையை)

சாதி மதங்களால் சாமிக ளால்வந்த
தாழ்வு நிலை பாரீர் ! - அந்தத்
தாழ்வை அகற்றிடச் சாதி மதங்களைத்
தகர்த்தெறி வோம்வாரீர் (மடமையை)

ஒருசமு தாயமாய்ப் பகுத்தறி வாளர்கள்
ஒன்று திரண்டிடுவோம் - வாய்க்கும்
திருமண உறவுகளால் நம்சமூகத்தைச்
சீர்பெற நிறுத்திடுவோம் (மடமையை)

(வேறு)

பண்ணிசைப் பாடலைக் கேட்டோர் பலரும் 40
எண்ணம் விரிந்துநல் எழுச்சி பெற்று
நின்ற போதில் நிகரில் மாறனார்
அங்கு வந்தனர்; ஆர்த்தனர் அனைவரும்;
மேடையில் வரிசையாய் விளங்கிய இருக்கையில்
ஆடவர் மகளிர் அனைவரும் வியக்க 45
அரசியும் மாரியும் அமர்ந்தனர் ஒருபால்;
அழகனும் தமிழும் அமர்ந்தனர் மறுபால்;
அவர்தம் நடுவே மாறனார் அமரவும்,
"இவர்தம் மணவிழாத் தலைமை ஏற்றுச்
சிறப்புச் செய்கெனச் சீர்சால் விடுதலை 50
புரத்தினர் சார்பில் புகழினோய்! தங்களை
வேண்டு கின்றேன்" என்றோர் இளைஞர்
மூண்டநல் லன்புடன் மொழியவும், வளர்மதி
வரவேற் புரைக்கும் வாய்ப்பினை ஏற்றே
உரையாற் றியபின், ஒப்பில் மாறனார், 55
"அன்பும் அறிவும் ஆர்ந்த பெரியீர்!
இன்ப வாழ்வினை ஏற்க விருக்கும்
அரசியும் மாரியும் அழகனும் தமிழும்
உரைசால் வாழ்க்கை ஒப்பந்தம் ஏற்றபின்
நிறைவாய் வாழ்த்துரை நிகழ்த்துவேன்" என்று 60
குறையிலா மாரியைக் குளிர்ந்து நோக்கி,
"என்னைத் தொடர்ந்தே இயம்புக" என்னலும்
"அன்புசால் பெரியீர்! அன்னையீர்! வணக்கம்.
விடுதலை புரத்தின் வேலு, வள்ளியாம்
கெடுதல் இலாதார் கெழுதகை அன்பின் 65
ஒருமகன் மாரி யப்பனா கியநான்
பெருமகிழ் வுடனும் பெருவிருப் புடனும்
களங்கம் அகன்ற கருத்தினர் ஆகிய
விளங்கு புகழினர் விடுதலை புரத்தின்
பெருமாள் இலக்குமி ஆகியோர் பெற்ற 70
ஒருமகள் உமாஅ ராணி என்றும்
அறிவர சியெனும் அருந்தமிழ்ப் பெயரிலும்
அறியப் படுவோ ராகிய தங்களை
வாழ்க்கைத் துணையாய் ஏற்றும் வாய்த்த
வாழ்வில் ஏற்படும் வருத்தம் மகிழ்வெனும் 75
எல்லா வற்றிலும் இணைப்பங் கேற்றும்
இல்லறக் கடமையை இயற்றியும் இனிய
நண்பர்க ளாக நாட்டினர் போற்றப்
பண்புடன் திகழ்வோம் என்றுநல் லுறுதியை
ஏற்கிறேன்" என்றனன் மாரி; அரசியும் 80
"ஏற்கிறேன் யானும் எழுச்சிக் கவிஞராம்
மாரி யப்பனை மகிழ்வுடன் எனது
சீரிய துணைவராய்" என்றபின் இருவரும்
மாலை மாற்றிட, மகிழ்வுடன் அவையோர்
ஆரவா ரித்தே அவர்தமை வாழ்த்தினர்; 85
"அழகனும் தூய்தமிழ் அரசியும் தொடர்ந்து
மொழிவர் உறுதி மொழி" யென மாறனார்
உரைத்தலும் வாழ்க்கை ஒப்பந்த உறுதியை
உரைத்தனர் இருவரும்; உவகை மீதுற
வாழ்த்தினர் அவையோர்; மாறனார் மகிழ்ந்து 90
வாழ்த்துரை நிகழ்த்தினர்; "மானமிகு பெரியீர்!
பிறப்பினால் வருவதாம் என்று பேசிய
சிறப்பிலாச் சாதியும் சிறுமைசெய் மதமும்
புறக்கணித் தெழுந்து புதுச்சமு தாயமாய்த்
திரண்டு பலப்பல திறத்தினர் ஒன்றாய் 95
நேற்றே இணைந்தனம்; நிகரிலா வெற்றியை
ஈட்டினம் இன்றே இவர்தம் மணத்தால்;
சாதிசேர் உலகைத் தனியிர்ட் டறையென
ஓதினர் புரட்சிப் பாவலர்; நாமெலாம்
இருளின் நீங்கி ஒளிசேர் உலகை 100
அறிவின் துணையால் அடைந்தனம்; அறிவே
துணையென வாழ்வைத் தொடர்வோ மாயின்
இணையிலாச் சிறப்பினை எய்துநல் திண்ணம்;
மடமை விலகும் மானம் நிலைக்கும்;
அடிமைத் தளையும் அகலும்; அறிவைப் 105
போற்றா திருந்ததால் பொய்யர் நம்மிடை
வேற்றுமை பலவும் விளைத்தனர்; அறிவிலர்
அன்று படைத்த ஆண்டவன், விண்ணில்
நின்றே இந்த நீணிலம் முழுதும்
ஆள்வன் என்றனர்; அவனே ஏற்றத் 110
தாழ்வினைச் செய்தவன் என்றும் சாற்றினர்
பகுத்தறி வில்லாப் பலரும், பொய்யர்
உரைத்தவை எல்லாம் உண்மை என்றே
நம்பி வீழ்ந்து நலிந்த நிலையில்,
தந்தை பெரியார் தமிழின வீழ்ச்சியின் 115
அடிப்படை யதனை ஆராய்ந் தறிந்து
படிப்படி யாகப் பகுத்தறி வென்னும்
ஒளியைத் தமிழர் உணர்வில் புகுத்திநல்
வழியைக் காட்டினர் வாட்டம் மறைந்தது;
தமிழனத் துள்ளும் தந்நலம் விரும்பும் 120
சிறுமையர் சிலரால் தீயவர் ஆளுமை
இன்னும் தொடரும் இழிநிலை அறிந்து
வன்முறை யாளரை வகைபட எதிர்த்துநல்
அறிவினைப் பரப்பும் அரும்பணி யதனைச்
செறிவாய்ச் செய்வோம்; செந்தமிழ் மொழியே 125
எல்லா நிலையிலும் இன்றமி ழகத்தின்
எல்லையுட் சிறந்த இடத்தினைப் பெற்றிட
ஒல்லும் வகையால் உழைத்திடல் நன்றாம்
இல்லந் தோறும் குழந்தைகட் கென்றும்
தூய்தமிழ்ப் பெயரே சூட்டுக! மலர்விழி 130
வாய்மைச் செல்வி, வளர்மதி, தாமரை,
கனிமொழி, முத்து, கவின்தமி ழரசி,
இனிமை, தென்றல், எழிற்பூங் கொடியெனச்
செல்வன், அழகன், செந்தமி ழரசன்,
வள்ளுவன், இறையன், வளவன், பாரி 135
நன்னன், இளங்கோ, நாவுக் கரசென
எண்ணறு தமிழ்ப்பெயர் இருக்கவும் பிறமொழிப்
பெயர்சூட் டுவதால் பெருமையோ? பெரியீர்!
அயல்மொழிக் கென்றும் அடிமை ஆயினம்
என்பதைக் காட்டும் இழிநிலை யன்றோ 140
நம்மிடைப் பிறமொழி நாட்டுதல்? மேலும்
உரையில் எழுத்தில் பிறமொழி கலத்தலும்
முறையிலை என்பதும் அறிக" எனச் சொல்லி
"அரசியும் மாரியும் அழகனும் தமிழும்
நிறைவுறப் பெரியார் நெறியினில் வளங்கள் 145
எல்லாம் பெற்றுப் பல்லாண்டு வாழ்க" என
நல்லறி வாளராம் நயத்தகு மாறனார்
வாழ்த்திய ஞான்று, வளர்மதி யம்மை
சேர்த்தனர் ஒருமடல் திருமாற னாரிடம்;
மடலை விரித்து நோக்கினர் மாறனார்; 150
திடலில் இருந்தோர் திகைத்தனர்; அவர்தம்
திகைப்பினை நீக்கும் திறத்துடன், "பெரியீர்!
திகைத்திடல் வேண்டா மகிழ்ச்சியே கொள்வீர்!
இந்து மதத்தினர் அல்லர் என்றும்
எந்த மதமும் எமக்கிலை என்றும் 155
நேற்று விலகினோம்; வேற்று மதங்களை
ஏற்றோர் தாமும் எண்ணிப் பார்த்தபின்
தகவிலாத் தத்தம் மதங்களைத் துறந்து
நிகரில் லாதநம் நெறியினை ஏற்றுச்
சீருடைப் புதிய சமுதா யத்தில் 160
சேர விருப்பம் தெரிவித் துள்ளனர்"
என்று மாறனார் இயம்பிடக் கேட்டு,
நன்று நன்றென அவையினர் நவில,
விரும்பியோர் தம்மை மேடைக் கழைத்துப்
"பெருந்துயர் விளைத்த பிணியாம் என்று 165
சாதி மதங்களைத் தவிர்த்துநாம் இங்கே
ஓதிய நெறியில் ஒன்றிட வந்த
இனியரை வாழ்த்தி நம்முடன் இணைப்போம்!
இனியும் வருவோர் எவரா னாலும்
வருக" எனச் சொல்லி மாறனார் தொடர்ந்து 170
பெருகிய மகிழ்வுடன் பேசினர்; "பெரியீர்!
புதிய விடுதலை புரத்தில் நாம்சில
விதிகளை ஏற்போம்; மேல்கீழ்ச் சாதிகள்
நம்மிடை இல்லை; நம்மைப் பிரிக்கும்
எம்மதச் சார்பும் ஏற்ப தில்லை; 175
மக்க ளிடையே மடமை வளரத்
தக்க செயல்களைத் தவிர்ப்போம்; நமது
நெறியினர் அலாத நெறியின ரோடு
அறவே மணவினைத் தொடர்புகள் அற்ப்போம்;
தனியார் உடைமை இனியிங் கில்லை 180
எனவோர் விதியும் இயற்றி அனைத்தும்
பொதுமை ஆக்கி விடுதலை புரத்தில்
புதுமை செய்தொரு புரட்சி விதையை
ஊன்றினம்; வேறுள ஊர்களில் தானும்
தோன்றிஇப் புரட்சி தொடரு மாயின் 185
ஆங்குள மக்களும் அவலக் கவலை
நீங்கி இன்புறூஉம் நிலைமை காணலாம்
உடைமை பொதுவெனும் உயர்பேர் அறத்தான்
விடுதலை புரத்தில் விளைந்ததால் இங்கினி
வறுமை அகன்று வளமையே தங்கும் 190
சிறுமை நீங்கிச் சிறப்பே நிலவும்;
எல்லா இளையரும் இன்றி யமையாக்
கல்வி கற்றலும் கற்ற பின்னர்
உடல்வலு வுள்ளோர் அனைவரும் உழைத்தலும்
கடனாம்; எவரும் கடமை மறந்தால் 195
உரிய தண்டம் உளதாம்; இதனை
அறிந்தே உழைப்பவர் அனைவரும் அவர்தம்
உழைப்பிற் கேற்ற ஊதியம் பெற்றுச்
சிறக்க வாழலாம் தெளிக" எனச் சொல்லி
மீட்டும் ஒருமுறை விளைபுகழ் மணவினை 200
ஏற்றோர் தம்மை இசைபெற வாழ்த்தித்
தலைவர் மாறனார் தகவுடன் அமரவும்
அலையெழும் கடலென அகமகிழ் பெருமாள்,
பலர்க்கும் நன்றி பகர்ந்தபின் நிறைவாய்
விளக்கி உரைத்தனர்; "விடுதலை புரத்தீர்! 205
நல்ல தமிழினம் நாமெலாம்; நம்மிடை
இல்லை வேற்றுமை; இழிந்த தாய
சாதியும் மதமும் தனியார் உடைமையும்
தீதென விலக்கினம்; தீயவர் நம்முடைச்
சாதிஎன்? மதம்என்? சாற்றுக! என்றால் 210
சாதியும் இல்லை மதங்களும் எமக்கிலை
கெடுதலைச் செய்யும் சாதி மதங்களின்
விடுதலை பெற்றுநல் அறிவினர் ஆயினம்
என்னலாம்; பின்னரும் இணைந்த நம்மை
இன்னர் எனப்பிறர்க்(கு இயம்பிட வேண்டின் 215
பெரியார் நெறியில் பீடுற நடக்கும்
'பெரியார்' என்னும் பிழையிலாப் பிரிவினர்
என்றே இயம்புவம்" என்றனர்; பகையை
வென்று வாகை சூடிய வீறுடன்
நன்றிது நன்றென முழங்கி 220
நின்றனர் பெரியார் நிலையினர் தாமே
முற்றும்

Monday, June 21, 2010

இயல் - 29

சாதி மதங்கள் தகர்ந்தன

நாவ லூரின் நடுவே பரந்து
மேவிய திடலில் விளங்கிய மேடையின்
மருங்கே அரசியும் வளர்மதி யம்மையும்
அருந்தமிழ் மாரியும் அழகனும் ஆர்வலர்
சூழ நின்று தொடரும் இரவில் 5
நாளை விடியற்கு ஏற்பன நவில
இன்னே வருகுவர் ஈடிலா மாறனார்
என்ற விருப்புடன் எதிர்பார்த் தவராய்,
நின்ற வேளையில் நெடும்புகழ் மாறனார்
வந்து சேர வாழ்த்தொலி முழங்கப் 10
பேரூக் கமுடன் பெருமாள் வந்து
மாற னார்க்கு மாலை சூட்ட
வளர்மதி யம்மை வரவேற் புரைத்தனர்;
அழகனும் மாரி யப்பனும் அரசியும்
சுருங்கச் சொல்லிநம் தொல்பழஞ் சிறப்பினை 15
விளங்க உரைத்தபின் வெல்புகழ் மாறனார்
செந்தமிழ் மொழியின் சிறப்பும், சீர்த்தியும்,
அந்தநாள் தமிழர்தம் அறிவும், ஆற்றலும்
உரிமை வாழ்வின் உயர்வும் தமிழினம்
அடிமைப் பட்ட அவலமும் சீர்மிகு 20
வளர்மதி யம்மை, மாரி, அரசி,
அழகன் முதலியோர் அருமையும் உரைத்தபின்
"தாழ்ந்நு நிற்கிறோம் தமிழர்; அதனால்
வீழ்ந்த தமிழக மேன்மை கருதி
ஒல்லும் வகையால் உழைக்க" எனவும் 25
சொல்லித் தம்முரை தூய மாறனார்
நிறைவு செய்தனர்; நெஞ்சில் தங்கிய
உரையினால் மக்கள் உணர்ச்சி பெற்று
மாறனார் வாழ்கென மகிழ்ந்து வாழ்த்துக்
கூறிக் கலைந்தபின் குற்றம் நீங்கிய 30
பெருமாள், மாறனார் தம்மைப் பெரிதும்
விரும்பித் தம்முடன் விருந்திற்(கு) அழைக்கப்
புகழ்திரு மாறனார் பொருளுடன் அரசியைத்
திகைத்து நோக்கத் "திகைத்திட வேண்டாம்
மாற்றம் நிகழ்ந்த வகையினைப் பின்னர் 35
ஏற்புற இசைப்பேன் என்றன் அழைப்பினை
ஏற்பீர்" என்று பெருமாள் இயம்பி,
ஆற்றலன் மாரியை, அழகனை, மதியை
"வருக அனைவரும் மகிழ்வேன்" என்னலும்
பெருகிய களிப்புடன் பெருமாள் இல்லம் 40
சேர்ந்தனர் அனைவரும்; சின்னத் தாயை
"நேர்ந்த துணையிவள் நேற்று முதல்" என
விருந்தினர் தம்மிடம் பெருமாள் விளம்பிடப்
பொருந்திய கைகளால் வணங்கிநின் றவளைக்
கண்டவர் அனைவரும் களிப்பினில் மூழ்கினர். 45
மண்டும் அன்புடன் வந்தவர் தம்மை
விருந்துணச் செய்தபின் விருப்புடன் அவர்முன்
இருந்த பெருமாள், அனந்த ராமனை
நல்லவன் என்றே நம்பி அவனது
இல்லம் சென்றதும் பொல்லா அனந்தன் 50
மாரியை சேர்ந்தோர் வேறொரு மதத்தில்
சேர்வதை தடுக்க, மாரியின் துணையாய்
என்மகள் இருப்பதால் அவளையும் என்னையும்
கொன்றொழித் திடும்வகைக் கொலைஞர் சிலருடன்
திட்டம் வகுத்ததும் தீயவன் உறவை 55
வெட்டி நீங்கி வீடு வந்ததும்
எண்ணிப் பார்த்தபின் ஈடிலாக் கொள்கை
உன்னதே என்றுநான் என்மகளி டத்தில்
உரைத்தும் அறிக" என உரைசால் பெருமாள்
விரித்துரை செய்தது வியப்புடன் கேட்டு 60
மாறனார் அவரை மகிழ்வுடன் வாழ்த்திக்
கூறினர்; அய்ய! குற்றமில் லாத
அறிவியக் கத்தின் அருமை உணர்ந்தெம்
நெறியினை ஏற்றதை நினைந்து மகிழ்கிறோம்
அகவையால், கல்வி அறிவால், தூய 65
புகழ்சேர் வாழ்க்கையால் அன்றி மாந்தர்
பிறப்பால் உயர்வும் தாழ்வும் பேசுதல்
சிறப்பிலை; மாரியைச் சேர்ந்தோர் தம்மை
ஒருமதம் கீழ்என ஒடுக்கி வைத்ததால்
பிறமதம் நாடினர்; அஃதும் பிழையாம் 70
ஆதலால் இன்றே அவர்தமைக் கண்டு
பேதைமை அகலப் பேசிட வேண்டும்"
என்று புறப்பட ஏனையோர் தம்முடன்
"நன்றே அய்ய! நானும் வருவேன்
தூயநும் பணிக்குத் துணையா நிற்பேன் 75
தாயே! துணையே! தடையிலை நீயும்
வருக" என அழைத்துப் பெருகிய மகிழ்வுடன்
பெருமாள் தாமும் பீடுசேர் மாறனார்
தம்மைத் தொடர்ந்தனர்; சான்றோர் அனைவரும்
செம்மை நெறியினைத் தெளிந்தில ராகிய 80
எண்ணிலர் கூடி இருந்தவோர் திடலை
நண்ணின ராகவும் நலமே செய்யப்
போந்தனர் கொல்லோ? புன்மைசெய் மதத்தின்
நீங்குதல் தவறென நிகழ்த்தவோ? என்றே
அய்யுற(வு) உற்ற ஆசிலார் தம்மிடைத் 85
துய்யநல் லரசி தோன்றி மொழிந்தனள்;
"அன்புசால் பெரியீர்! அனைவரும் கேண்மின்
துன்பமே தொடர்ந்ததால் தூய்மையில் மதத்தைத்
துறந்து பிறமதம் தொடர விரும்பிய(து)
அறிந்துநம் தலைவர் அறிவுடன் பொருந்தும் 90
நல்வழி காட்டவும் அல்வழி ஈதுஎனச்
சொல்லவும் வந்துள்ளார்; தூயவ ரோடு
கலந்துரை யாடிக் கருத்தினைப் பகிர்ந்து
நலஞ்சேர் முடிவினை நாடுவம்" என்றலும்
"சார்ந்திம் மதத்தால் தலைமுறை பலவா 95
நேர்ந்த கொடுமைகள் நீயிர் அறிவீர்
கால மெல்லாம் கடுமையாய் உழைத்தும்
கீழோர் என்றே எம்மை மேலோர்
தள்ளி வைத்தும் தாழ்த்தியும் பலப்பல
அல்லல் விளைத்தனர் அதனால் நாங்கள் 100
இம்மதம் நீங்கிட எண்ணி வெறொரு
நன்மதம் சார்ந்திடல் நன்றென நயந்தோம்
பிழையோ?" என்றொரு பெரியவர் வினவப்
"பிழையிலை நுமக்குப் பிறப்பினால் இழிவு
சொல்லும் மதத்தைத் துறத்தல்; ஆயினும் 105
நல்ல மதமென நம்பி வேறொரு
மதத்தை நாடுதல் மாண்பிலை எந்த
விதத்திலும்" என்றே மாறனார் விளம்ப
"இந்த மதத்தின் ஏற்ற தாழ்வுகள்
அந்த மதத்தில் இல்லை" என்றோர் 110
இளைஞர் சொன்னதை ஏற்க மறுத்துத்
தலைவர் மாறனார் சாற்றினர்; தம்பி!
"ஒவ்வொரு மதத்திலும் உள்ளன குறைகள்
வெவ்வே றளவில்; எல்லா மதங்களும்
மக்களை மறந்து மகேசனை நினைத்தலே 115
தக்க தென்று சாற்று கின்றன
மக்களோ? மகேசனோ? அறிவுனோர் மதிக்கத்
தக்கவர் என்பது சாற்றுவன் கேண்மின்
மாயிரு ஞாலம் வாழ்உயிர் வரம்பில
ஆயினும் அவற்றுள் அரிய விலங்கெனத் 120
தக்க மாந்தர்தம் தனிப்பெருஞ் சிறப்புஎன்?
மற்றுள விலங்கின் மாறு பட்டு,
மாண்பயன் தருவன தராதன வகுத்துக்
காண்பன நிகழ்வன கருத்தில் இருத்தி
என்என எதற்கென ஏன்என வினவும் 125
மன்பெருஞ் சிறப்பின் வளர்பகுத் தறிவெனும்
உடைமையே; அதனால் உயர்ந்த மாந்தர்
மடமையின் நீங்கிய மாண்பின ராகிப்
பற்பல புதுமைகள் படைத்தனர்; ஆயினும்
சிற்சில வேளையில் இயற்கையின் சீற்றம் 130
கண்டதால் நடுங்கிக் காரணம் ஒருவன்
உண்டென நம்பி உலகைப் படைத்தவன்
அவனே என்றும் அவனில் லாமல்
இவண்ஓர் அணுவும் இயங்கா தென்றும்ய
வளரும் அறிவு தளரும் நிலையில் 135
சிலர்தாம் தமக்குத் தெரிந்தவா றெல்லாம்
இறைக்கோட் பாடுகள் இயற்றி மதங்களாம்
சிறைக்குள் மக்களைச் சிக்க வைத்தனர்;
இறைவனை நம்புக; எல்லாம் அவன்செய்
முறையென நம்புக; முழுமையாய் நம்புக 140
என்றே உலகின் எல்லா மதங்களும்
அன்றே உரைத்தன; அதனை ஏற்றதால்
ஏனெனும் கேள்வி எழுப்ப மறந்து
மானுடர் அறிவு வளர்ச்சி குன்றிட
ஏற்றத் தாழ்வும் வேற்றுமை பலவும் 145
போற்றத் தகுவன என்னும் பொல்லாக்
கொள்கை வளர்ந்து குறைகள் பெருகி
வல்லோர் எளியரை வதைக்கத் தொடங்கினர்;
மாந்தர் அறிவு மயங்கி மதங்களில்
வீழந்த திறமிது; வீழ்ந்தவர் எழவே 150
பெரியார் அறிவின் பெருமையைப் பேசினர்
அறிக" என மாறனார் அறைதலும் ஆங்கொரு
பெரியவர் வினவினர் "பீழை எமக்குத்
தருவதால் இம்மதச் சார்பி லிருந்து
நீங்கிட நினைந்தோம் நீங்கிய பின்னர் 155
ஈங்கொரு காவல் இன்றி நாங்கள்
வாழ்ந்திடக் கூடுமோ வகைபட மொழிக" என,
ஆழ்ந்து நினைந்தபின் அறிவுசால் மாறனார்
பகர்ந்தனர்; "பெரியீர்! பண்பிலா மதத்தை
இகந்தவர் அனைவரும் இணைவே றிலாத 160
பகுத்தறி வென்னும் பண்புசால் நெறியை
மதித்தே ஏற்று வாழ்ந்திடின் வேறொரு
காவல் எதற்காம்? கழறுக! இம்மதம்
தேவையில் லாமல் நமக்கு விதித்த
சாதியைத் துறந்து மதத்தையும் தவிர்த்தே 165
ஆதியாம் தமிழால் ஆர்ந்த அன்பினால்
ஒன்று படுவோம்; திருமண உறவும்
நன்றே காண்குவம் நமக்குள்" என்று
மாறனார் புதிய வழியினைத் தேர்ந்து
கூறலும் பெருமாள், "கொள்கைக் குன்றாம் 170
மாறனார் அவர்களே! மகிழ்வுடன் தாங்கள்
சாற்றிய புதிய சமுதாய அமைப்பில்
ஏற்றுக் கொள்க என்னையும் சாதியைத்
துறந்தே சின்னத் தாயைத் துணையென
விரும்பி ஏற்றேன்; விழுமிய என்மகள் 175
மாரி யப்பனை மணக்க விரும்பினள்
சேரியன் என்று மறுத்தநான் மாரியை
மருமகன் என்றே மகிழ்வுடன் ஏற்கிறேன்"
என்று வீறுடன் இயம்பிட, ஆங்கு 180
நின்ற அழகன் நெஞ்சம் கலந்து
மொழிந்தனன்; "பெரியீர்! முற்றும் உணர்ந்தீர்!
இழிந்தவர் நமருள் எவரும் இலர்என
அறிந்தனன் ஆதலால் வளர்மதி அம்மையின்
சிறந்தவோர் மகளை விரும்பினேன் அவர்தம் 185
விருப்பமும் அறிய விழைகிறேன்" என்றனன்
வளர்மதி மகள்தான், தாயை வணங்கி
உளம்நிறை விருப்பம் உரைத்தனள்; சாதிப்
பிரிவுகள் தகர்த்துத் திருமண உறவுகள்
விரிவது கண்டு, விம்மிதம் அடைந்து, 190
பெரியார் நெறியே பிழையிலா நெறியென
அறிந்து மகிழ்ந்து ஆங்கிருந் தோர்எலாம்
"எந்த மதமும் எமக்கு வேண்டாம்
இந்தப் புதிய நெறியினை ஏற்கிறோம்"
என்று முழங்க, இன்முகம் காட்டி 195
மாறனார் அவர்தமை வாழ்த்திட, எழுந்த
மாரி யப்பன், "சாதியின் நீங்கி
ஓரினம் ஆயினம்; ஊறுசெய் மதமெனும்
பிடியில் இருந்தும் பெற்றோம் விடுதலை;
மிடிமையில் இருந்தும் விடுதலை பெற்றிட 200
நிகராய் அமைந்த நிகரில் லாத
புகழ்ச்சமு தாயப் புதுமை தன்னை,
உடைமை பொதுவெனும் உயர்ந்த நிலையை
அடைதலும் தக்கதாம்; அதிலும் வெற்றி
பெற்றால் மட்டுமே பெரியார் கொள்கை 205
வெற்றி பெறும்" என விளம்பலும், மாரியின்
தந்தை எழுந்து, "தலைவரே எனக்குச்
சொந்த மான நன்செய் அனைத்தையும்
புதுவதாய் மலர்ந்தநம் பொற்புடைச் சமூகப்
பொதுமை ஆக்கினேன்" என்று புகலவும் 210
தனியார் உடைமை தகர்வது கண்ட
நனிபே ருவகையால் நல்லோ ராகிய
வேறு சிலரும் தத்தம் உடைமையைக்
கூறினர் பொதுவெனக் கூடியோர் அனைவரும்
பெருமகிழ் வெய்திடப் பெருமாள் தாமும் 215
"தருகிறேன் என்னைச் சார்ந்த உடைமை
அனைத்தும்" என்னலும் அகமகிழ் வுற்று
"நினைத்ததன் மேலாய் நிகழ்ந்தது; நேற்று
வரையிலும் சாதி மதமெனும் கொடிய
சிறையி லிருந்து சிறுமைப் பட்டோம்; 220
இன்று விடுதலை எய்தினோம் இனிநாம்
ஒன்று பட்ட உயர்சமு தாயமாய்
வாழ விருக்கிறோம்; மயக்கும் நெறிகளை
வீழச் செய்த விடுதலை புரமென
இந்தச் சேரியை இனிநாம் அழைப்போம் 225
எந்தப் பகைமை எதிர்வந் தாலும்
இணைந்தே வெல்வோம்" என்ற மாறனார்,
நினைந்தே தந்நிலை விளக்கம் நிகழ்த்தினர்
"அறிவுசால் பெரியீர்! ஈங்குளோர் அனைவரும்
பெரியார் நெறியில் பிணைந்தொரு சமூகமாய் 230
ஆனது மகிழ்ச்சியே; அறிவினைப் பரப்பிடும்
நானும் நும்மொடு நண்ணுதற் கேற்ற
தகுதியேன்; அஃதே தக்கதாம் அந்தத்
தகுதியைச் சாற்றுவேன்; சான்றீர்! என்றன்
ஒருமகள் 'தென்றல்' உயர்வினள் அவளும் 235
அருமை மகனாம் 'அந்தணன்' தானும்
பிறப்பினாற் சொலப்படும் சாதியை மறுத்துச்
சிறப்பாம் அறிவுத் திறத்தினர் தம்மைக்
காதல் துணையெனக் கைப்பிடித் துள்ளனர்,
காதலால் யானும் கருத்தொரு மித்துத் 240
தீதிலார் ஒருவரைத் திகழ்துணை யாக
அன்றே ஏற்றுக் கொண்டவன் என்பதை
இன்றுநீர் அறிய இயம்பினேன்; நுமக்கு
நன்னெறி காட்டும் நானும் விரும்பி
அந்நெறி நடப்பவன் அறிவீர்" என்று 245
மாறனார் கூறலும் மகிழ்ச்சியால் அனைவரும்
ஆரவா ரித்தே "அரும்பெருந் தலைவ!
மாரி அழகன் மணவிழாக் குறித்துக்
கூறுக" என்றனர். குற்றமில் பெருமாள்,
"மாறனார் தலைமையில் மணவிழா நாளையே 250
சீருடன் நடைபெறும்; சிறந்த விடுதலை
புரத்தில் வாழும் புதுச்சமு தாயப்
பெருமையர் அனைவரும் வருகென மகிழ்வுடன்
அழைக்கிறேன்" என்றனர் அனைவரும்
களிப்பினில் திளைத்துக் கலைந்துசென் றனரே. 255

Saturday, June 19, 2010

இயல் - 28

சின்னத்தாய்

மலரும் அன்புடன் மானமும் அறிவும்
உலகில் எங்கும் நிலவும் சிறப்பும்
என்றும் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகள்
இன்றி மாந்தர் இணைந்துவாழ் நிலையும்
காணப் பெரியார் காட்டிய வழியில் 5
பூணத் தகுந்த பொறுமை யோடும்
அகத்தில் எழுந்த ஆர்வத் துடனும்
பகையினை அழிக்கும் படைக்கல னாகக்
கூரிய அறிவினைக் கொண்டு நிற்கையில்,
சேரி வாழ்நர் திகைப்பினால் எடுத்த 10
தீய முடிவைத் திருத்தும் பொறுப்பினைத்
தூய அரசி சுமக்கத் திணிந்தனள்
மாரி யப்பனை மயக்கம் தீர்த்துச்
சீரிய தலைவராம் மாறனார் வருகை
நாளை அதன்பின் நலமே இங்குச் 15
சூழும் என்னும் திணிவுடன் வீட்டில்
நுழைந்த அரசி, நொயினால் பெரிதும்
வருந்தினள் பொலச் சின்னத் தாயவள்
கிடந்தது கண்டு, கிளரந்த அன்பினால்
"நடந்ததென்? தாயே நவில்கென, அரசிபால் 20
தாதை செயலைக் கூறல் தகுமோ?
ஏதும் ஒருபயன் இதனால் விளையுமோ?
என்றே நிஐத்து மறுமொழி இசைத்தல்
இன்றிக் கண்ணீர் இழிந்திட இருந்தவள்
கண்டுளம் பதைத்(து)அவள் கைகளைப் பற்றிக் 25
கொண்(டு)அவள் துயரைக் குறைத்திட எண்ணி,
"அம்மையே எனைஉன் அருமை மகளாய்
எண்ணுவை ஆயின் இயம்புக" என்ற
கள்ள மில்லாக் கனிமொழிக்(கு) இசைந்துதன்
உள்ளம் திறந்தே உரைத்தனள் "மகளே! 30
உன்னருந் தந்தை என்னிடம் இன்று
பன்னாள் தன்னுள் பதுக்கிய ஆசையைச்
சொன்னார் அவர்தம் தூய்மைஇல் ஆசைக்(கு)
இந்நாள் முதல்நான் இணங்க வேண்டுமாம்;
மறுத்தேன் உள்ளம் வாடி நீங்கினார் 35
வெறுத்தே அவர்எனை விரட்டிடின் உன்னைப்
பிரிய நேருமே பேதையேன் அதற்கே
வருந்து கின்றேன் மற்றெனை வருத்தும்
கவலையொன் றில்லை கண்மணி! என்றவள்
கவலையை மாற்றக் கருதிய அரசி 40
"தாயே ஆகி என்னைத் தாங்கும்
தூயவள் நீயில் வீட்டில் தொடர்ந்து
தங்கி யிருக்கத் தக்கது செய்வேன்
இங்கி ருந்துநீ ஏகிட நேர்ந்தால்
உன்னுடன் ஓடி வருவேன்" என்று
சொன்ன வேளையில் துடிப்புடன் வந்த
தந்தையைக் கண்டு, தவிர்க்கவோ? சாடவோ?
என்று நினைந்து நின்ற அரசியை
அருகினில் வருகவென அழைத்து "மகளே!
உறுதுயர் தந்தேன் உனக்கென உரைத்து, 50
நம்மவர்க் கெல்லாம் நல்வழி காட்டும்
செம்மையன் என்றுநான் திடமாய் நம்பிய
அனந்த ராமனே அழிவினைத் தூண்டும்
இழிந்தவன் என்பதை இன்றே அறிந்தேன்;
வன்முறை நாடும் மடவோர் சிலரைத் 55
தன்னிடம் அழைத்துத் தவறிலா தவளாம்
உன்னையும் என்னையும் ஒருங்கே ஒழித்திட
எண்ணியே திட்டம் இயற்றிய வேளையில்
சென்றேன்; அவனே தீமையின் இருப்பிடம்
என்றே கண்டதால் இழிந்தவன் உறவை 60
அறுத்துக் கொண்டேன்; ஆழ நினைந்தே
உரைப்பது கேள்நீ உன்பெருங் கொள்கையே
சிறந்ததாம் உண்மை தெளிந்தேன்" என்றுளம்
திறந்து தந்தை செப்பிடக் கேட்டுக்
கருங்கல் இதுஎனக் கருதிய ஒன்று 65
விரும்புநற் கனிஎன விளங்கிடக் கண்டோர்
கொள்ளும் மகிழ்ச்சியும் குறைவென் பதுபோல்
உள்ளம் எல்லாம் உவகையில் துள்ள
"எந்தையே! நுந்தம் இன்சொல் கேட்டுச்
சிந்தை மகிழ்ந்தேன் தீயரை நீயிர் 70
அறிந்த தாலும் அறிவியக் கத்தின்
சிறந்த கொள்கையைத் தேர்ந்த தாலும்
குற்றமும் குழப்பமும் முற்றும் நீங்கிஇச்
சிற்றூர் இனிமேல் திகழும் ஆயினும்
வீட்டில் குற்றம் விலக்கிய பின்னரே 75
நாட்டைத் திருத்துதல் நன்றென் பதனை
ஏற்பீர் அன்றோ" என்றவள் வினவ
"மாற்றம் இல்லை மகளே! நமது
வீட்டில் சாதி வேற்றுமை இலைஎன
நாட்டுவம் உறுதிநீ நயந்த ஒருவனைத் 80
துணைஎனக் கொள்ளத் துணையாய் இருப்பேன்
எனைநீ நம்புக" என்றவர் இயம்ப
"என்துணை யோடுநான் ஏகுவேன் அய்ய! ஓர்
இன்துணை இன்றிநீர் இருப்பதோ?" என்ற
அறிவினள் கேள்வியின் ஆழம் அறிந்ததால் 85
"அறிவுடை அரசியே! அறிந்தேன் உன்னுளம்
பணிமகள் சின்னத் தாயினை என்றன்
துணைஎனக் கொள்வேன்; துடைப்பேன் அவள்துயர்
அழைக்கஇங்(கு) அவளை என்னலும் அரசி
களிப்புடன் சென்று "கவலை நீங்கி 90
எழுக" எனத் தாயின் இருகைப் பற்றி
உழுவலன் புடனே உயர்ந்த தந்தையின்
முன்னர் நிறுத்தவும், முறையிலாக் கைம்மை
இன்னே ஒழிந்ததென்(று) எண்ணின ளாகத்
திருந்தியப் பெருமாள் எதிரில் உள்ளம் 95
பொருந்தி நின்ற பொற்பினள் தன்னைத்
துணைஎன ஏற்றதைச் சொல்லும் வகையில்
அணிதிகழ் ஆழியை அணிந்தபின், "மகளே!
சின்னத் தாயே இந்நாள் தொடங்கிஉன்
சின்னத் தாய்எனத் திகழ்வாள்" என்றுதம் 100
உள்ளம் கலந்து பெருமாள் உரைத்திடத்
துள்ளும் மகிழ்வின் தொடர்ச்சியாய் அரசி
தூய அன்புடன் தொழுதனள்
தாயின் கால்களில் தலையை வைத்தே

Friday, June 18, 2010

இயல் - 27

தீயவர் திகைத்தனர்
நிலக்கிழார் பெருமாள் நெஞ்சினைப் பன்னாள்
அலைத்து நின்றஓர் ஆசையின் இலக்காய்
விளங்கிய சின்னத் தாயிடம் பன்முறை
உளம்நிறை விருப்பம் உரைத்திட விழைந்தும்
என்சொல் வாளோ? எதிர்த்துநிற் பாளோ? 5
தன்செய லால்உயர் தகுதியைக் கிறைகும்
வண்ணம் ஊரில் வழக்குரைப் பாளோ?
என்னும் அச்சம் இருந்ததால் நேற்று
வரையில் தயங்கி நின்றவர் இன்று
கரையை வெள்ளம் கடத்தல் போல 10
ஆசை மீதுற அகமெலாம் துள்ள
வீசு தென்றலின் மென்மை சேர்த்துச்
"சின்னத் தாயே! உன்னை விரும்பிப்
பன்னாள் இரவும் பகலும் உழன்றேன்
துணையை இழந்து துவளும் இருவரும் 15
இணைதல் தவறோ? இயம்புக" என்று
சொன்னது கேட்டுத் துணுக்குற் றவளாய்த்
தன்னிலை ஓர்ந்து, தக்கவா(று) எண்ணித்
தெளிந்தபின் தன்னை விழைந்துநின் றார்க்கு
மொழிந்நனள் தன்னிலை முறைமையால் "அய்ய! 20
எள்துணை இழந்தபின் இந்நாள் வரையில்
புன்சொல் எவரும் புகன்றிடா வண்ணம்
வசையின் நீங்கி வாழ்ந்து வருகிறேன்
அசைவுஎன் நெஞ்சை அண்டிய தில்லை.
இன்றுநும் விருப்பம் இயம்பிய பின்னரே 25
நின்றென் நெஞ்சம் நெகிழ்ந்த(து) எனினும்
காதல் மகளின் காதலைத் தீய
சாதி வெறியால் சாய்த்திட முனையும்
நீயிர், தாழ்ந்த நிலையின ளாம்எனைத்
தீய நிளைவுடன் சேர நினைப்பதாய் 30
எண்ணு கின்றேன் உண்மை தானே?
நன்மையோ? அறமோ? நவில்க" என்றனள்.
"மறைவாய் இணைந்து வாழ்ந்திடச் சாதி
முறையொரு தடையோ? இருவரும் விரும்பினால்
ஊர்அறி யாமல் உலகறி யாமல்
சேரலாம் இன்றே தெளிகநீ" என்றவர்
அவள்கைப் பிடிக்க ஆசையாய் அணுகிடத்
தவறெனவிலக்கிச் சாற்றினள் "அய்ய!
வருந்திய நும்உடல் வாட்டம் போக்கிட
விரும்பிஎன் உடலையே விரும்பினீர் யானோ, 40
ஆரும் துணையிலை ஆதலால் ஒருதுணை
சேரும் என்றால் சேரலாம், சேர்வதால்
கைம்மையின் நீங்கிப் பலரும் காணச்
செம்மையாய் வாழலாம் என்று தெளிந்தேன்
செயற்கையாம் சாதிப் பிணைப்பைச் சிதைத்தும் 45
இயற்கையே ஆண்பெண் இணை(வு)என ஏற்றும்
களவை மறந்து கற்புடன் வாழ
உளம்நிறை காதல் உளதேல் உரைக்க"
என்றவள் தெளிவாய் இயம்பிய பின்னர்க்
குன்றிய நெஞ்சுடன் குழப்பம் மீதுற 50
வீட்டின் நீங்கி விரைந்த பெருமாள்
நாட்டம் இன்றி நடந்தனர் தெருவில்,
ஆங்குஅவ் வேளையில் அனந்தன் சிலரொடும்
தீங்கினை விளைக்கத் திட்டமிட் டிருந்தார்
"சேரியில் வாழும் சிறுமையர் எல்லாம் 55
வேறு மதத்தை விரும்பி ஏற்றிட
ஒன்று கூடி உறுதி செய்தனர்
நன்றோ? சொல்வீர் நமக்கெலாம் மேலே
ஈசன் ஒருவன் இருக்கிறான் அவனே
நீசர் என்று நிலத்தில் சிலரைச் 60
சென்ற பிறப்பின் தீவினைப் பயனால்
இங்கு படைத்தனன். ஈசன் படைப்பை
மதிக்க மறுத்து மாரியாம் சேரியன்
எதிர்த்து நிற்கிறான்; இழிந்தவ ரெல்லாம்
வேறு மதத்தில் சேருவ ராயின் 65
கூறுமின் நம்மைக் கும்பிட்டு நிற்பரோ?
படைப்பின் சிறப்பைப் பாழாய்ப் போனவன்
உடைக்க முயன்றால் உலகம் உய்யுமோ?"
இவ்வா(று) அனந்த ராமன் இயம்பலும்
"எவ்வா றேனும் இழிந்தவர் முயற்சியைத் 70
தடுக்க ஒருவழி சாற்றுக" என்று
கடுத்த முகத்துடன் ஒருவன் கழறிய
வேளையில், அய்யர் வீட்டு வாயிலில்
காலை வைத்த பெருமாள் கலங்கிட
ஒருவன் சொன்னான்; "அறிவில் லாத 75
பெருமாள் மகளே பின்னணி இதற்கெலாம்
ஆதலால் அந்த ஆணவக் காரியை
மோதி அழித்து முடித்து விட்டால்
சேரியர் கொட்டம் தீர்ந்திடும்" என்னலும்
ஆரியச் சார்பின் அனந்த ராமன், 80
"நம்மதம் வாழ்ந்தால் நாமும் வாழலாம்
இம்மதம் அழிக்க எண்ணுவோர் தம்மைக்
கொன்றழித் தாலும் குற்றம் இல்லை
அன்று மதுரையில் அரியநம் மதத்தைக்
காத்திட எண்ணா யிரவரைக் கழுவில் 85
ஏற்றிக் கொன்றதால் அன்றோ நம்மதம்
நிலைத்த தென்பதை நீவிர் அறிக.
அலைகடல் துயிலும் அந்தப் பெருமாள்
பொல்லா அரக்கரைப் பூமியில் அழிக்கவே
நல்லவ தாரம் நாட்டினர் இந்தப் 90
பெருமாள் ஊரில் பெருந்தனக் காரனாய்
இருந்தும் மகளைத் தடுத்திடல் இன்றியும்
நம்மதம் காக்கும் நாட்டம் இன்றியும்
பொய்ம்மதம் இங்கு புகுவதை எதிர்க்கும்
முயற்சி இன்றியும் மூடனாய் வாழ்கிறான் 95
செயத்தக் கதனைச் செய்வீர்" என்னலும்
முரடன் ஒருவன், "மூடனாம் அந்தப்
பெருமா ளுடனவன் பெற்ற பெண்ணையும்
ஒன்றாய் ஒழித்தால் ஊர்க்கு நல்லதாம்"
என்றுரை செய்ய, இதுவரை வாயிலில் 100
நின்று கேட்டு நீள்சினம் உளத்தில்
கொண்ட பெருமாள் கூடி யிருந்தோர்
திடுக்கிடும் வண்ணம் திடும்என நுழைந்து,
"கடுத்தது மொழிந்த கயவன் யாரடா?
என்னையும் என்னிரு கண்ணெனத் தக்க 105
பெண்ணையும் ஒழிக்கப் பேதையர் கூடித்
திட்டம் வகுத்துச் செயற்படு வீரோ?
ஒன்றாய் வாழும் ஊரவர் தம்மை
இரண்டாய்ப் பிளக்க எளியரைத் தூண்டும் 110
சூதினர் நீரோ தூயவர்? உயர்ந்த
சாதியர் என்னத் தகுமோ?" என்னலும்
அச்சம் மறைத்தே அனந்த ராமன்
நச்சினர் போல நயவுரை பகரவும்
நரியனார் அனந்த ராமன் என்பதை 115
உரிய வேளையில் உணர்ந்து கொண்ட
பெருமாள், அனந்தன் பேச்சை மறுத்(த்)என்
திருமகள் வாழ்வினில் செம்மை சேர்த்திட
நல்வழி காட்டுவீர் என்றே நம்பினேன்
அல்வழி காட்டி அல்லல் விளைத்தீர் 120
சாதியைக் காப்பதே தக்கதென் றெனக்கு
நீதி சொல்லிச் சாதியில் வேறாம்
ஒருவனை நும்மகள் மணந்ததை ஒப்பிப்
பெருமகிழ் வுற்றீர் ! பேச்சுத் திறத்தால்
தன்னலம் சார்ந்து சாதிக்(கு) ஒன்றெனச் 125
சொன்து நீதியோ? தொடத்தக்கார் என்று
விலக்கப் பட்டவர் ஆயினும் ஊர்க்கு
நலஞ்செய் வோரே நாட்டில் உயர்ந்தோர்
என்பதை உணர்ந்தேன் இனியும் நுமது
புன்மொழி கேட்கும் புன்மையிங் கில்லை 130
ஒருவராய் இருந்து நீயிர்இவ் வூரினை
இருகூறு ஆக்கிடும் இழிசெயல் எதிர்த்து
வென்றி பெறுவேன் விரைந்து" எனத் திரும்பிச்
சென்றனர்; தீயவர் திகைத்தே
நின்றனர் பெருமாள் நெடுமொழி நினைந்தே.

இயல் - 26

புரட்சியின் வாயில்

கழுதூர் வழுதூர் கணியூர் மணியூர்
தொழுதூர் மருதூர் தோகையூர் முதலிய
ஊர்களில் ஒருமத ஒடுக்கு முறையால்
சீரழி வுற்ற சேரியர், பிறமதம்
மேவிய தறிந்து, மேலவர் கொடுமையால் 5
நாவலூர் அகத்தும் நலிந்த சேரியர்
தம்மதம் துறக்கவும் தகவுடை மதமென
இன்னொரு மதத்தில் இணையவும் விரும்பினர்
என்னும் உண்மையைச் சின்னத் தாயவள்,
"அன்னே! அரசி! அறிக" என, அரசியும் 10
தந்தை பெரியார் சாவு கேட்டு
நொந்தது போலும் நோயினள் ஆயினள்,
மாறும் மிடிவை மாரி யப்பனும்
மீறிடல் இன்றி வீழ்ந்து பட்டனன்
என்னும் உண்மை இன்னும் அவளைத் 15
தின்னத் தொடங்கிடத் திகைத்தவள் எழுந்து
மாரி யப்பனை நேரினில் காணச்
சேரியை நோக்கிச் சென்றனள்; மாரியும்
நொந்தவன் ஆதலின், வந்தவள் தன்னைச்
சிந்தையில் மகிழ்ச்சி சிறிதும் இன்றி 20
வருகெனச் சொல்ல, "அறிவியக் கத்தீர் !
பெருமையோ நுமக்கு பிறமதம் சேர்தல்?
கல்லென நீத்துக் காலைக் குத்தும்
முள்ளினை மிதித்தல் முறையோ? சொல்வீர்"
என்னலும் மாரி யப்பன் இயம்பினன்; 25
"இன்னல் உற்ற எம்மவர், இந்து
மதத்தின் நீங்கலும் மற்றவர்க் காக்கவோர்
மதத்தைச் சார்தலும் மாண்பெனக் கொண்டனர்;
மக்கள், சாதியோ மதமோ இன்றி
இப்பெரு நாட்டில் இணைந்து வாழ்தல் 30
இலையாம்; ஆதலின் எம்மவர் முடிவை
உளம்ஒப் பாமலே ஒற்றுமை கருதி
நின்றேன் எனினும் நின்னொடும் கலந்தே
இன்றொரு முடிவை எடுக்க எண்ணினேன்
நன்கனம் எண்ணி நவில்க" என, அரசி, 35
"பொன்மனச் செம்மால் ! புரிந்து கொண்டேன்
நும்நிலை; ஆயினும் நுவல்வேன் கேண்மின்!
செம்மை நெறியெனத் தெளிந்தோம் பெரியார்
சொன்ன நெறியை; தூய்மை இல்லாப்
புன்மை பலவும் தம்மகத் தடக்கிய 40
மதங்களின் நீங்கி வாழ்ந்து நாட்டில்
புதுமை செய்தலே புரட்சியாம்; அதனைச்
செய்து முடிக்கும் திறனும் தெளிவும்
மெய்யாய் நம்மிடம் விளங்குதல் அறிவீர்"
என்றவள் சொல்லி யிருந்த வேளையில் 45
குன்றாச் சிறப்பிற் கொள்கையன் அழகன்
வந்து சேர்ந்தனன்; மாரியை வணங்கி
"அன்பரே ! பலரும் அறியுமோர் செய்திதான்
உண்மையோ? உரைமின்" என்னலும் அரசி,
"உண்மையே; இங்குளோர் ஒருங்கு கூடித் 50
தம்துயர் நீங்கிடத் தக்க தீர்வுஎன
இந்த முடிவை எடுத்தனர்; இவரும்
தனியே நிற்பதோ? சார்வதோ? சொல்க என
எனையே கேட்கிறார் எண்ணிச் சொல்கிறேன்
தமிழர் காப்புக் கூட்டத் திற்கு 55
நமதருந் தலைவர் நாளை வர்கிறார்
மாறனார் இங்கே வருகையில் அவர்பால்
கூறுவம் மதத்தின் மாறுவம் என்று
சொல்வதை; அவர்தம் தூய அறிவால்
சொல்வதை ஏற்றுத் தொடர்வோம் பணிகளை 60
இங்கே அதுவரை இவருடன் அத்தான்
தங்கி யிருப்பீர்" என்று சாற்றிப்
போயினள் அரசி புரட்சியின்
வாயில் ஈதென மனத்தினுள் வைத்தே.

இயல் - 25

மதம் மாறுவோம்

சீரிய உழைப்பில் செல்வரை, இழிந்த
சேரியர் என்றும், தீண்டத் தகார்இவர்
என்றும் விலக்கி ஊரின் எல்லையில்
கொண்டு வைத்த கொடுமை ஏன்என
ஆய்ந்து காணும் ஆர்வம் இன்றி, 5
ஓய்ந்து தமிழர் உறங்கு தற்கும்
உறங்கியோர் என்றும் உணர்வுறா வண்ணம்
அறங்கள் இவையென அறம்இல் லவற்றைப்
பேசித் தமிழரைப் பிளவு படுத்தவும்
மாசுடை வேத மதநெறி வந்தது; 10
வருணம் நான்கும் வந்து நிலைத்தன;
பெருமை குலையப் பிறப்பால் உயர்வு
தாழ்வினை ஏற்றுத் தமிழர் தாழ்ந்தனர்;
'ஊழ்வினை ஒன்றே உயர்வினை' என்றனர்;
வந்த மதத்தை, மயங்கிய தமிழர் 15
அந்தநாள் ஏற்றதால் அடிமை ஆயினர்;
சாதிகள் பன்னூ றாகித் தமிழர்
மோதிக் கொண்டனர் முட்டிக் கொண்டனர்;
அந்த மதத்தால் அடிமைப் பட்டு
நொந்த தமிழர், நோவுதீர் வழியெனப் 20
பின்னர் வந்த பிறமதம் சார்ந்தனர்;
இன்றும் சாதி ஏற்றத் தாழ்வு
சொல்லும் மதத்தைத் துறந்து பற்பலர்
நல்ல தென்றே பிறமதம் நாடுதல்
அறிந்த சிலர்தாம், அறியா மையினால் 25
வருந்திய நாவலூர்ச் சேரி வாழ்நரைக்
கூட்டி மதம்மாறும் கோரிக்கை வைத்தனர்;
"காட்டில் கழனியில் கடுமை யாக
நாளும் உழைப்பவர் நாமே; எனினும்
சூழும் தொல்லைகள் நமையே சூழ்வதேன்? 30
உழைத்துக் கிடைக்கும் ஊதியம் பெற்றுப்
பிழைக்கும் நிலையிலும் பிறப்பால் நம்மைத்
தீண்டத் தகாத சேரியர் என்றும்
இந்த நிலைமை இறைவன் விருப்பால் 35
வந்தெ தென்றும் வாய்த்த விதியை
என்றும் எவரும் மாற்ற இயலா(து)
என்றும் சொல்லும் இந்து மதத்தை
ஏற்று வாழ்ந்தோம் என்ன கிடைத்தது?
தூற்றலும் தொல்லையும் துயரும் தாமே? 40
சேரிய ருள்சிலர் சிறக்கக் கற்றுநம்
ஊரினுள் நிமிர்ந்தே உலவுதல் கண்டும்,
அன்றுபோல் என்றும் அடிமையாய் இராமல்
இன்றுநாம் விழிப்படைந் தெழுந்தது கண்டும்,
பொறுக்க லாற்றாப் புன்மையர், நேற்று 45
நெருப்பு வைத்ததால் நிற்கிறோம் தெருவில்;
சேரிக் கோயிலுள் சிலையாய் நிற்கும்
மாரிதான் துணையாய் வந்தனள் கொல்லோ?
ஆதலால் சொல்கிறேன் அனைவரும் கேண்மின்
சூது நிறைந்ததும் தொல்லை தருவதும் 50
இந்து மதமே என்பதை உணர்ந்தும்
இந்து மதத்தை இன்றே துறந்தும்
பிறப்பால் உயர்வு தாழ்வு பேசாச்
சிறப்புடை மதத்தில் சேர்வோம்" என்றுஓர்
இளைஞர் ஆங்கே எடுத்துச் சொல்ல, 55
வளைந்த நெஞ்சுடன் வாழ்க்கையைக் கழித்தும்,
என்றும் விடியல் இல்லை இருளில்
ஒன்றி வாழ்தலே ஊழ்வினை என்ற
எண்ணத் துடனும் இருந்தோர் இடையே
உண்மை உரைக்கும் உறுதி யோடு 60
பேசினன் மாரி; "பெரியீர்! கேண்மின்
மாகடை இந்து மதத்தினைத் துறந்து
வேறு மதத்தில் சேர்வோம் என்று
கூறினர்; அந்தக் கொள்கையை மறுக்கிறேன்;
இந்து மதத்தால் இழிவு நமக்கு 65
வந்தது என்பதை மறுக்க வில்லை;
வல்லாண் மையினர் வலியிலார் தமக்குத்
தொல்லை தந்து சுரண்டும் கொடுமை
எந்த மதத்திலும் இருப்பதை நீவிர்
இந்தநே ரத்தில் எண்ணிப் பார்ப்பீர்; 70
ஒருமதம் நமக்கே உறுதுயர் தருமெனப்
பிறமதம் சேர எண்ணுதல் பிழே"
என்று சொன்ன எதிர்ப்புரை கேட்டு
"நன்று தம்பி நவில்க நாமே
எந்த மதமும் சார்தல் இன்றி 75
இந்த உலகில் வாழ இயலுமோ?"
என்று வினவிட, இயலும் இயலும்
என்றனன் மாரி; எங்ஙனம் என்பதை
இயம்பிடுக முன்பலர் எதிர்க்குரல் எழுப்பி,
"நயம்படப் பேசுவை; நாங்கள் உடன்படோம்; 80
இறப்பினும் தீரா இழிவினைச் செய்யும்
சிறப்பிலா மதத்தின் தீர்ந்தபின் நமக்கொரு
காவல் வேண்டும் ஆதலால் பிறமதம்
மேவலே நமக்கு மேன்மை தரும்" எனச்
சொன்னது கேட்டுத் "தொல்லையின் நீங்கிட 85
நன்னெறி அஃதே; நாமெலாம் வேறு
மதத்தில் இணைவோம்; மாற்றம் எந்த
விதத்திலும் சொல்ல வேண்டாம்" என்று
பலரும் ஒருங்கே பகர்ந்தபின் ஆங்கே
நிலவிய சூழலை நெஞ்சினிற் பதித்து, 90
மாரி யப்பனும் வளர்மதி அம்மையும்
சேரி வாழ்நருள் சிந்தனை சிறந்த
இளைஞர் சிலரும் ஏற்க வியலா
விளைவினைக் கண்டு மிகுந்த கவலை
உடையர் ஆகி, ஊரவர் கொண்ட 95
முடிவை மாற்ற முடியா தென்றே
தீமை இதுஎனத் தெரிந்தும்,
ஊமையர் ஆயினும் ஒற்றுமை கருதியே

Monday, June 14, 2010

இயல் - 24

சிறுமையர் வைத்த தீ

தலைவர் மாறனார் தமிழர் காப்பு
விழாவில் பேச விருப்பது குறித்து
மாந்த நேயம் வளர்க்கும் நெறியைத்
தேர்ந்து தெளிந்த இளைஞர் சிலருடன்
நள்ளிர வாகியும் உள்ளத் தளர்ச்சி 5
இல்லை யாகி, ஏற்பன பேசிக்
காலையில் காணலாம் என்று கலையும்
வேளையில் அந்த வீதியின் கோடியில்
"தீ தீ அய்யோ தீதீ எந்தப்
பாவீ வைத்தனன் பற்றுதே" என்ற 10
கூக்குரல் கேட்டுக் குலைநடுக் குற்றுத்
தீக்கொழுந் தெழுந்து தெரிந்த திசையினில்
மாரி யப்பனும் மற்றவ் விளைஞரும்
சீறிப் பாய்ந்து சென்றனர்; ஆங்கே
கூரை களில்தீக் கொழுந்துவிட் டெரிந்து 15
வீறுடன் அடுத்த வீடுகள் தாவிப்
பற்றி எரிந்து படர்ந்தது கண்டு,
சுற்றி நின்றவர் துணையுடன் மாரியும்
ஙீடுகள் நுழைந்து விரைந்து விரைந்தே
ஆடுகள் மாடுகள் அகற்றி, வேண்டும் 20
பொருட்களை எடுத்தும் கொடுத்தும் பொறுப்புடன்
தெருவினில் வீசியும் தீயை அணைக்கத்
தண்ணீர் சுமந்து சாடியும் ஓடியும்
பெண்களை, வயதிற் பெரியர் சிறியரைப்
பொல்லா நோய்களாற் புலம்பியோர் தம்மைப் 25
பள்ளியுள் கோயிலுள் பாங்குடன் சேர்த்தும்
சுற்றிச் சுற்றிச் சுழன்று சுழன்று
முற்றும் தீயை அவிக்கும் முனைப்பொடும்
பிறரைக் காத்துப் பேணும் பெட்பொடும்
முறையொடு மாரி முயன்றும், முறையிலார் 30
இட்ட நெருப்பினால் ஏழையர் வாழிடம்
குட்டிச் சுவர்களாய் ஆன கொடுமையைத்
தொண்டுசெய் மாரியும், சுடுகதிர் பரப்பிக்
கொண்டுகீழ் வானில் கொஞ்சம் கொஞ்சமாய்
நிவந்த ஞாயி றோனும் தம்தம் 35
சிவந்த விழிகளால் சினந்து நோக்கினர்;
நிலம்நீர் காற்று வானம் நெருப்பென
உலகம் அறிந்த உயர்பே ரியற்கை
ஆற்றல் அய்ந்தும் மக்களை அழிக்கும்
ஆற்றல் உடையவே; ஆயினும் தீத்தொழில் 40
மாக்களின் கையில் மக்களை அழிக்கும்
தீக்கரு வியெனத் தீயே இருப்பதை
நினைந்து வருந்தி நின்ற மாரியை,
நனைந்த கண்ணராய் நாற்புறம் சூழ்ந்து,
"தீமை எவர்க்கும் செய்திலோம்; நாளெலாம் 45
ஊமையாய் உலவினோம்; உழைத்தோம்; ஆயினும்
இப்பெருந் தீமை இழைத்தவர் யாவர்?
எப்படி அறிவதாம்? எவரைச் சொல்வதாம்?
அனைத்தும் இழந்தோம்; அவலம் சூழ்ந்தது;
நினைத்தால் வெந்து நெஞ்சும் அழியும் 50
இந்நிலை மாற என்செய லாம்?" எனச்
சொன்னவர் தம்மொடு துயரில் மூழ்கிய
மாரி யப்பன் வருத்தம் மறைத்தே
ஆறுதல் கூறி, "அனைவரும் கேண்மின்!
கடுகிச் சென்று காவல் ரிடத்துஇக் 55
கொடுமை கூறிக் குற்றம் பதிந்து
மீள்வேன்; நீயிர் மிகுதுயர் மறந்து
சூழ்நிலைக் கேற்பத் தொடர்பணி யாற்றுக"
என்று கூறி இளைஞர் சிலருடன்
சென்று காவல் நிலையத் தலைவரை 60
நேரில் கண்டு சேரியில் நிகழ்ந்ததைக்
கூறினன்; தலைவர் குற்றம் பதிந்திட
மறுத்தனர்; அத்துடன் "நீயும் உன்னுடன்
பொறுப்பிலாச் சிலரும் வெறுப்பன செய்தே
ஊரில் குழப்பம் உண்டா தற்கும் 65
சேரியில் இரவில் தீப்பிடித் தற்கும்
அடிப்படை யானதாய் அறிகிறேன்; சட்ட
விதிப்படி உன்னைச் சிறையினுள் வீழ்த்த
முடியும் ஆயினும் முதல்முறை யானதால்
விடுகிறேன் செல்க" என விளம்பிய காவல் 70
துறையின் தலைவர்முன் சுடர்முகம் தூக்கி
அறைந்தனன் மாரி; "அய்யா! சட்டம்
வளையு மானால் வலிந்த சான்றுடன்
தளைசெய்(து) என்னைச் சிறையுள் வைக்கலாம்;
எந்தையைக் கொல்ல வந்தவன் இவன்என 75
முந்துநாள் குற்றம் முறையாய்ச் சொன்னோம்;
அன்னோன் விடுத்தே அடக்கமாய் வாழும்
என்னை வீழ்த்திட எண்ணி நிற்கிறீர்;
நன்றநும் கடமை நாடகம்; எம்மவர்
இன்று விழிப்புடன் இருக்கிறார்; எம்மைக் 80
காக்கும் திறனும் காவலர் நுந்தம்
போக்கும் அறிவோம்; போகிறோம்; விரைவில்
விடியல் தோன்றும்; வெளிச்சம் பரவும்;
அடிமைத் தளைகள் அறுபடும்; நாங்கள்
புதிய உலகம் செய்து நும்மனோர் 85
விதியை எழுதுவோம்" என்று வீறுடன்
முழங்கிய மாரியாம் மொய்ம்பினன்
கிளர்ந்து நடந்தனன் கிளைஞர் தொடரவே

இயல் - 23

வேதியர் ஊட்டிய வெறி

உறங்கிக் கிடந்த தமிழரை எழுப்பி
அறிவும் மானமும் அன்புடன் ஊட்டிச்
சாதியும் மதமும் தமிழர்க்(கு) இல்லை
சூதினர் விளைத்தவை தொல்லை தருபவை
விலக்குக அவற்றை விரட்டுக என்றும் 5
நலத்தகை அறிவினால் நந்தமிழ் மொழியால்
ஓரின மாகி உயர்வீர் என்றும்
சீரிலா நெறியில் செலாதீர் என்றும்
அரியன சொல்லி அயரா(து) உழைத்த
பெரியார் வழியில் பீடுற நடந்தும் 10
ஒருபெரும் புரட்சியை விரைவினில் நிகழ்த்தத்
திருமாற னாரின் சீரிய தலைமையை
ஏற்றும் நாவ லூரின் இளைஞரை
மாற்றும் பணியில் வளையா(து) உழைக்கும்
மாரி யப்பனின் வன்மையால் தங்கள் 15
சீரெலாம் விரைவில் சிதையுமோ என்ற
அச்சம் மீதுற அனந்த ராமன்
எச்செயல் செய்தால் இவனை ஒழிக்காலம்
என்பதை எண்ணி இருந்த காலை,
வன்முறைக் கஞ்சா மரபினர் சிலர்தாம் 20
வந்து நின்று வணங்கிச் சாமி!
இந்தக் கொடுமை இன்னுமிவ் வூரில்
நடந்திட லாமோ? நமக்கு நல்லதோ?
வளர்ந்திட லாமோ? மதிப்பற் குரியநம்
முன்னோர் அந்நாள் வகுத்த விதிகளை 25
இந்நாள் ஒருவன், இழிந்த பிறப்பினன்
மாற்ற முயல்வதைப் பார்த்திருப் பதுவோ?
ஏற்ற(து) உரைப்பீர்" என்னலும் இராமன்,
சநாதனம் அழிக்கத் துடிக்கும் தமிழனை
முனைப்புடன் மோதி அழித்திட நினைத்துத் 30
தமிழருள் சிலரே தம்மை அணுகிய
அமைவினை எண்ணி அகத்துள் எழுந்த
மகிழ்ச்சியை மறைத்து, "மற்றுஅக் கொடிய
நிகழ்ச்சிதான் என்ன? நேக்கு விளக்கமாய்
உரைமின் அதனை ஒழிக்கத் தக்கதை 35
உரைப்பேன்" என்னலும், ஒருவன் உரைத்தனன்;
"சேரியில் பிறந்தே ஊரினைக் கெடுக்கும்
மாரியால் தொல்லை மறைதிட வில்லை;
பெரிய சாதிக் கோயில் குளங்களில்,
தெருவில் உள்ள தேநீர்க் கடைகளில், 40
எங்கும் சமத்துவம் என்று சொல்லி
இங்குள சேரியின் இழிந்த பயல்களைத்
தூண்டி விட்டுத் தொல்லை தருகிறான்
தூண்டிலில் சிக்கிய மீன் என எங்கள்
சாதியில் படித்த தறுதலை சிலரும் 45
சூதறி யாமல் தொடவும் தகாத
அந்த மாரியின் அல்வலைப் பட்டதால்
எந்த நேரமும் எடுபிடி போல
அவனுடன் இணைந்தே அலையும் கொடுமையை
எவரிடம் சொல்வோம்? உரிமைக் காவல் 50
எனுமொரு பேரால், இனுமொரு கூட்டம்
இனும்சில நாளில் இங்கு நிகழுமாம்;
அன்றொரு நாள்பகுத் தறிவுக் கூட்டம்
என்றொரு பேரால், எங்கும் நிலைத்த
சாதியை மதத்தைச் சாமியைப் பிராமண 55
நீதயைக் குறித்து நிந்தை செய்தே
அந்தப் பயலும் அவனோ(டு) இணைந்து
வந்த பயல்களும் வாயில் வந்ததை
உளறிச் சென்ற பின்னரே ஊரில்
களரி தொடங்கிக் கலகம் விளைந்தது 60
தாக்கப் பட்டான் தகப்பன் எனினும்
போக்கிலி மாரி புரட்டுத் தனத்தைத்
தொடர்ந்து செய்யத் துணிந்து நிற்கிறான்
கடந்த முறைபோல் காலிகள் மீண்டும்
சாமியை மத்ததைச் சாதியைச் சாடிச் 65
சாமி! பேசுவர்; சாமியே தண்டனை
தரும்என எண்ணிப் பொறுமையாய் இருப்பது
தருமமோ சொல்க" எனச் சொல்வேன் அந்தச்
சிறுமையன் மாரியைப் பெரிய கோவில்
தெருவில் கண்டேன் சிந்தையில் எழுந்த 70
அநுதா பத்தால் 'அப்பன் நலமோ'
எனவே கேட்டேன் என்உயர் பிறப்பையோ
வயசையோ கருதி மதிப்பளிக் காமல்
கயவன் என்னைக் காரணம் இன்றிப்
பேசினன்; ஜாதிப் பிளவும் மோதலும் 75
ஆசையால் நானே ஆக்குவ தாகச்
சொல்லக் கேட்டுத் துடித்தேன் உலகில்
எல்லாம் அறிந்த ஈசனே அவனவன்
பூர்வ ஜென்ம புண்ணிய பாவம்
சேரும் வகையெலாம் ஞான திருஷ்டியால் 80
அறிந்து பிறப்பால் ஆக்கினன் ஜாதிகள்;
தெரிந்தே ஏற்றுச் செய்வினைப் பயனை
அனுபவிக் கின்றோம் அவன்செயல் அல்லால்
மனிதன் செயல்என மடையன் சொன்னால்
ஏற்க லாகுமோ? இன்னும் சொல்வேன் 85
நேற்றவன் என்னைத் தூற்றிய அளவில்
நின்றிருந் தாலும் நெஞ்சில் வேதனை
இன்றெனக்(கு) அதிகம் இருந்திருக் காது
சேரியில் வாழும் சிறுமைய ரேஇவ்
வூரிலும் நாட்டிலும் உயர்ந்தவர் என்றும் 90
அப்பனைத் தாக்கிய ஒருவனைக் காவலர்
தப்ப விட்டதால் தண்டனை அவனே
தருவன் என்றும் தாக்கியோன் ஜாதியை
ஒருநாள் அடியோ(டு) ஒழிப்பன் என்றும்
இன்னும் உங்கள் ஜாதியில் உயர்ந்து 95
நன்னிலை உள்ள நல்லோர் சிலரைப்
பெயரைச் சொல்லிப் பேசினன்; கேட்டென்
வயிறுதான் எரிந்தது; வயதா கியநான்
தனியே அவனைத் தாக்க முடியுமோ?
இனியும் இங்கவன் என்செய் வானோ? 100
தெய்வம் நின்று கொல்லும் என்பர்
பொய்யிலை அதற்குள் இந்தப் புலையன்
ஊரையே அழிப்பன் உண்மை; இதற்குநாம்
ஆரை நோவதாம்? அன்றுஅக் கிழவன்
கருப்புச் சட்டைக் கயவரை வளர்த்ததால் 105
வெறுப்பும் மொதலும் விளைந்தன" என்று
வேதியர் சொன்ன விரிவுரை கேட்ட
சாதி வெறியர், "சாமி நாங்கள்
உப்புச் சேர்த்தே உண்கிறோம்; உணர்ச்சி
செத்திட வில்லை; சிறுமை சேர்க்கும் 110
மாரியும் அவன்வாழ் சேரியும் இன்றே
ஊரில் இலாமல் ஒழிப்போம்; இதனை
நாளையே காண்பீர்; நாங்கள் செய்யும்
சூளுரை ஈது" எனத் தொழுது சென்றிட
நினைந்தது நிகழும் என்றே 115
அனந்த ராமன் அகமகிழ்ந் தனரே.

Sunday, June 13, 2010

இயல் - 22

எல்லாம் அவர் செயல்

ஊரில் பலரும் 'சாமி' என்(று) உயர்வாய்ச்
சீருடன் விளிக்கும் சிறப்பெனக்(கு) இருந்தும்
சேரியில் பிறந்த சிறுபயல் இன்(று)என்
நேரில் நின்று நினைத்ததைப் பேசினன்
பகுத்தறி வென்றும் இனநலம் என்றும் 5
வகுப்பு வேற்றுமை வளர்க்கும் வகையில்
நாய்க்கர் பேசி நாசம் விளைத்துப்
போய்ச்சேர்ந் தார்இனிப் பொல்லாங்(கு) இலைஎன
நினைத்த தெல்லாம் நீரில் உப்பினை
நனைத்தது போல நாசமா யிற்றே 10
ஈரோட் டான்ஓர் எட்டடி பாய்ந்தால்
வீறு கொண்டிவன் அவனிலும் விரைவாய்ப்
பாய்கிறான்; அதனால் பாழாய்ப் போன
நாய்கள் எல்லாம் நம்மைப் பார்த்துக்
குரைக்கத் தொடங்கின என்று குமுறிச் 15
சிரைத்த மண்டையின் உச்சியில் சிலிர்த்து
நின்ற குடுமியை நீவிய வாறே
சென்ற இராமனைத் தெருவில் கண்ட
அம்பி யொருவன், "ஆத்தில் நும்மகள்
வந்திருக் கின்றாள் மதுரையி லிருந்து" எனச் 20
சொன்னது கேட்டுச் "சொல்லடா அவளா
என்மகள்? மதுரையில் எவனோ ஒருவனை
ஆம்படை யான்என ஆக்கிய(து) அறிந்தபின்
வேம்பென அவளை வெறுத்து முழுகினேன்
போகிறேன் அவளைப் போக்குவேன்" என்று 25
வேகமாய்ச் சென்று வீட்டில் நுழைந்தனர்
மருகனும் மகளுடன் வரவில்லை என்பதை
உறுதி செய்தபின் உள்ளத் தெளிவுடன்
மகளைக் கண்ட மகிழ்ச்சியை மறைத்து
"மகளே! எனைநீ மதிக்க வில்லை 30
இழிந்த சூத்ரனை மணந்தாய் என்றுளம்
அழிந்தே உன்பால் ஆத்திரம் கொண்டு
பேசுவேன் என்று பேதலிக் காதே
ஆசைநோய் பிடித்த அக்ரகா ரத்துப்
பீடைகள் உனக்குப் பேசிய விலையும் 35
ஆடிய ஆட்டமும் அதனால் நமக்கு
நேர்ந்ததும் நினைந்தால் நின்னை விரும்பிச்
சேர்ந்த ஒருவனைச் சேவித் திடவும்
கோவில் கட்டிக் கும்பிட்டு நிற்கவும்
ஆவல் நெஞ்சில் மேவிடும்; ஆயினும் 40
வீட்டுத் திண்ணையில் வேலை இன்றிச்
சீட்டுக் கச்சேரி தினமும் நடத்திடும்
நம்மவா பேசுவா நாலு விதமாய்
அம்மவோ அதற்கேள அஞ்சுவேன்; ஆதலால்
நினைத்த போதெலாம் நீவா; உன்னை 45
நினைக்கும் போதெலாம் அம்மா வருவள்;
அப்பா நிலையை அறிந்துகொள்; என்சொல்
தப்போ?" என்று தவிப்புடன் கேட்கவும்,
"பொன்னைக் கொடுத்துப் போயழைத் தாலும்
என்னவர் இங்கு வாரார்; அவர்தாம் 50
அக்கிர கார ஆச்சா ரங்களை
எக்கா லத்தும் ஏற்பவர் அல்லர்;
என்னை விரும்பி ஏற்றதும் பிராமணம்
பெண்ணென் பதானால் அல்ல; அறிவு
நெறியாம் மாந்த நேய யுடைய 55
பெருமையர் அதனால், வெறுமையாய் அகவை
கடந்தும் கன்னியாய்க் காலம் கழித்துக்
கிடந்த என்பால் கிளர்ந்த அருளால்
பேசிய அவர்தம் பெருமை அறிந்து
மாசிலா அவர்க்கு மனைவிஆயினேன்; 60
வேதம் ஓதியும் மேனிலை சாற்றியும்
பேதம் மாந்தருள் பேசும் நம்மினும்
உயர்ந்தவ ராம்அவர் உங்களைக் காண
நயந்துநான் புறப்பட, நற்பண் புடணனே
போய்நீ வருகெனப் புத்தாடை நுமக்கும் 65
தாய்க்கும் வாங்கித் தந்தெனை அனுப்பினர்
என்னவர் தாமும் இனியபெற் றோரும்
கண்ணெனப் போற்றி என்னைக் காக்கும்
திறத்திற்(கு) ஈடுஇலை அறிவீர்" என்றுதன்
சிறப்பு நிலையை மகள்தான் செப்பவும் 70
"நல்லது மகளே ! உனது நாயகன்
பொல்லாச் சேரிப் புலையனில் லாமல்
மறவனாய் வாய்த்தது வரையில் சேமமே
குறையில் லாமல் வாழ்வதாய்க் கூறினை
என்னடி நகையிது! இரண்டு சங்கலி! 75
பொன்னோ? இல்லை போலியோ? சொல்" என
"என்னவர் பொன்னர் எனக்கவர் அளித்ததும்
பொன்னே ஈது போலி இலை" என
நகையுடன் "நீயிர் நம்புக" என்று
மகள்தான் உரைக்க மகிழ்ந்தவர், "எல்லாம் 80
அவன்செயல்" என்னலும் "அப்பா! எல்லாம்
அவர்செயல்" என்றவர் தனக்கணி வித்த
ஆழியைத் தருக்குடன் காட்ட, அனந்தன்
போலிச் சினமுடன், போடி! இந்தக்
குறும்புதான் இன்னும் குறைய விலைநீ 85
திரும்புவ தெப்போ? சிலநாள் தங்கிச்
செல்லலாம் இல்லையோ சொல்" என, அங்குநான்
இல்லை யானால் என்னவர் மிகுந்த
அல்லற் படுவர் ஆதலால் காலையில்
செல்வேன்" என்று சொல்லக் கேட்டவர், 90
"நல்லது மகளே; பசித்தது உண்ணச்
செல்கிறேன் என்று, திளைக்க உண்டபின்,
நெடிதாய் ஏப்பம் நீட்டி முழக்கி
அடியே! வாஎன ஆம்படை யாள்தனை
நெருக்கமாய் இருத்தி ஊர்க்கதை எல்லாம் 95
பெருக்கமாய்ப் பேசி ஓய்ந்தபின் மாரியை
ஒழிக்கும் வழியினை ஓர்ந்து
விழிக்கண் மூடினர் விரிப்பினில் வீழ்ந்தே.

இயல் - 21

திகைத்து நின்ற தீயவர்


அடிமையாய்ப் பலரையும் ஆக்கிட எண்ணிக்
கொடியவர் வளர்த்த குற்றமாம் சாதிப்
பிரிவினை பேசி, அறியா மையினால்
பெரியவர் ஒருவரைப் பிழையிலா மாரியின்
தாதையை வீதியில் தாக்கிய அதனால் 5
மோதல் மேலும் மூளலாம் என்ற
எதிர்பார்ப் புடனே இளையரும் முதியரும்
கதிரவன் மறையுமுன் கடமைகள் முடித்துப்
பறவைகள் போலப் பகல்தான் மாய்ந்தபின்
உறையுள் அகத்தே ஒடுங்கினர்; ஆயினும் 10
என்றும் பிறர்நலம் எண்ணி வாழும்
குன்றாச் சிறப்பின் கொள்கைக் குன்றாம்
மாரி யப்பன் வழக்கின் வழாமல்
ஊரின் நடுவண் உள்ள நூலகம்
சென்று மீள்கையில் சிறப்புடை மகளிர் 15
மன்றம் நுழைந்து வளர்மதி அம்மையைக்
கண்டு நாவலூர்க் கண்ணும் ஒருநாள்
தண்டமிழ் உரிமை தழைத்திட வேண்டிக்
கூட்டம் சிறப்புடன் கூட்டவும் இந்த
நாட்டினைச் சூழ்பல கேட்டினைக் களையும் 20
உயர்குறிக் கோளுடன் உழைக்கும் மாறனார்
அவர்களைச் சிறப்புரை நிகழ்த்த அழைக்கவும்
ஒப்பிலா அம்மையின் ஒப்புதல் பெற்றபின்
அப்பணி தொடர்பாய் ஆர்வலர் சிலரைக்
கண்(டு)அவர் உள்ளக் கருத்தும் அறிந்து 25
கொண்டு, மேட்டுக் குடியினர் பிறரைச்
சுரண்டவும் அடிமைத் தொழும்பராய் என்றும்
இருண்ட அறையில் இருத்தி வைக்கவும்
அன்றே எண்ணி ஆக்கிய கோயில்
என்ற அமைப்பின் எதிரே நீண்ட 30
வீதியில் இரவு வேளையில் வந்த
கோதிலா மாரி யப்பனைக் குறித்து
வந்தெதிர் நின்று "மாரி உனது
தந்தை நலமா? தாக்கப் பட்டதாய்த்
தெருவில் பேசினர் தெரிந்து கொண்டேன் 35
ஒருமகன் நீயும் ஊரில் அந்நாள்
இல்லை யாமே? என்று பிறர்க்குத்
தொல்லை விளைப்பதே தொழிலாக் கொண்ட
அனந்த ராமன் ஆர்வம் இலராய்
நினைந்து வினவ, நினைந்த மாரியும் 40
"எந்தை நலமே" என்ற அளவில்
முந்தினன் விடைபெற; மோதலுக் குரியதை
மீண்டும் விதைக்க விரும்பிய இராமன்,
"ஆண்டுகள் பலவாய் ஜாதியை அழிக்கப
பெரியவா ளெல்லாம் பேசியும் பயனிலை; 45
அறியா மையினால் அவனும் இவனும்
ஜாதியைச் சொல்லித் தாக்கிக் கொள்கிறான்
நீதியோ? சொல் என, நெஞ்சகம் மறைத்த
அனந்த ராமனைச் சினந்து நோக்கி,
"நினைந்து சொல்கிறேன் நெஞ்சிற் கொள்க; 50
அறியா மையினை வளர்ப்பதும் சாதிக்
குறிகளைச் சொல்லிக் கோள்மூட் டுவதும்
ஆர்என் பதூஉம் அறிவேன்; அறிந்ததைக்
கூறுவேன் கேண்மின் கொடிய சாதியால்
பிரிந்து தமிழர் பிளவுபட் டென்றும் 55
இருந்தால் மட்டுமே ஏற்றம் நுமக்கென
அறிந்துளீர் ஆதலால் அறிவுடன் தமிழர்
பொருந்திடா திருக்கப் புன்மைச் சாதியை,
மதத்தைக் கடவுளை வளர்த்து வருகிறீர்;
இதனை அறியா(து) இருக்கிறார் எம்மவர்; 60
பெரியார் வந்(து)இப் பேதைமை அகற்றும்
அரிய பணியை ஆற்றிய அதனால்
இன்றைய தமிழின இளைஞர் பல்லோர்
நன்றும் தீதும் நன்கனம் உணர்ந்து
புரட்சி நிகழ்த்தப் புறப்பட் டுள்ளோம்; 65
புரட்சி வெல்வதும் போலிகள் வீழ்வதும்
உறுதியாம்; விரைவில் புதியதோர் உலகம்
நிறுவுவோம்; அங்கு நீயிரோ நும்போல்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
கள்ளர் எவருமோ காலை வைத்திட 70
உடன்படோம் என்பதை உணர்க" என்(று) உரைத்து
நடந்தனன் மாரி; நடுத்தெரு அதனில்
திகைத்து நின்ற தீயவர் மேலும்
பகைத்தீ மூட்டிப் பார்க்கும் விருப்புடன்
விரைந்தனர் வீடு நோக்கி 75
அறந்தனைக் கொல்லும் ஆற்றினை நினைந்தே

இயல் - 20

நாமே நமக்குக் காவல்

செயற்கையாம் சாதிகள் சிதைப்போம் என்றும்
இயற்கையாம் மொழியால் இணைவோம் என்றும்
மேனாள் விழாவில் விளம்பினன் மாரி;
ஆனால் தீயராம் அறிவிலார் கூடிச்
சாதியைச் சொல்லித் தமிழன் மாரியின்
தாதையை மோதித் தாக்கினர் என்றும்
குருதி சிந்திக் குற்றுயி ராக
மருத்துவ மனையில் மயங்கிய நிலையில்
கிடக்கிறார் என்றும் கேள்வன் ஒருவன்
அடக்க முடியாத் துயருடன் வந்து
கிளத்திடக் கேட்டுத் தளர்ச்சி அடைந்துதன்
உளத்துயர் மேலிட, "உண்மையில் எந்தை
இன்னல் எவர்க்கும் இழைத்தவர் அல்லர்
எந்தைக் கிந்நிலை என்னால் இன்று
வந்ததே" என்ற வருத்தம் வெளிப்பட
"இன்னே செல்வேன்; எந்தையைக் காண்பேன்;
அன்புசால் அழகரே! அருந்தமிழ் ஆர்வலர்
இங்குள இளையரும் முதியரும் எழுச்சி
பொங்கிநிற் கின்றனர்; பொறுப்புடன் நீயிர்
அன்னவர் எழுச்சியை அறிந்தே அவர்தமை
நன்னெறிப் படுத்துக நான்விடை கொள்கிறேன்"
என்ற மாரியின் இருகை பற்றித்
"துன்பம் சூழ்கையில் துணையாய் இருப்பதே
அன்பர்க்(கு) அழகாம்; அரிய பண்புசால்
நண்பர்க்(கு) அழகாம் நானும் வருவேன்
நும்முடன்" என்று நொடியில் புறப்பட,
மாரியும் அழகனும் வந்து சேதி
கூறிய கேள்வனும் குமுறு கின்ற
வருத்தம் செலுத்த வந்தனர்; நாவலூர்
மருத்துவ மனையில் மயங்கிக் கிடந்த
அய்யரை மாரி அன்புடன் நோக்கி
மெய்யெலாம் சோர விதிர்த்து நின்றனன்
வந்த மருத்துவர் மாரியைக் கண்டு,
"தந்தையை உயிர்த்திடத் தக்கவர் குருதி
தேவை; நேரம் செல்லச் செல்ல
ஆவி ஒடுங்கும்; அவர்க்குக் குருதி
வழங்கிட நுமருள் வாய்ப்புளோர் வருக" என,
அழகன் முன்வந்து "அய்யா! நானே
தருவேன் பெறுக" என தக்கவா றாய்ந்தபின்
குருதியை அழகன் கொடுத்தனன்; குருதியில்
சாதியும் இல்லை சமயமும் இல்லை
ஆதலால் மாரியின் அய்யர் உடலில்
ஓடிய அழகனின் உதிரம் விரைவில்
நாடியை உசுப்பி நலஞ்செய் தமையால்
அழுந்த மூடி யிருந்த விழிகள்
திறந்தன; அருகில் சிதைந்த நெஞ்சுடன்
நின்ற மகனை நெகிழ்ந்து நோக்கிக்
குன்றிய குரலால் "குறிச்சிக் கூட்டம்
வெற்றியோ" என்று வினவிய தந்தையின்
பற்றினை அறிந்து பட்ட துயரில்
பாதி குறையப் பாசம் மேலிட
"ஏதும் குறைவிலை எழுச்சியாய்க் கூட்டம்
நிறைந்தது; இங்கே நிகழ்ந்தது என்" என
"மறைந்து நின்று வாலியைச் சாய்த்த
வில்லன் இராமனை விறலோன் என்னும்
புல்லரே இந்தப் புவியில் பலராய்
இருப்பதால் இன்றும் இராமனைப் போற்பலர்
இருப்பதும் அவர்தம் ஏவு கணைகளாய்
நம்மவர் சிலரே நம்போல் வார்க்குத்
துன்பம் செய்தலும் தொடர்கதை யானதால்
ஊரில் உயர்ந்த சாதியர் என்மொரு
பூரியர் சொன்ன பொய்யுரைக் கிணங்கி
அறிவும் மானமும் அறவே இலாத
சிறியர் சிலர்எனைத் தெருவில் மறித்தனர்;
"உன்னை ஒழித்தால் உன்மகன் ஒடுங்குவன்"
என்னச் சொல்லி என்னைத் தாக்கினர்;
சாதியை நிறுத்தத் தகுவழி என்றுஎனை
வீதியில் வீழ்த்தினர்; விளைந்தது வேறாம்;
உன்னை விரும்பும் உயர்ந்தவள் அரசி
என்னைக் கண்டதும், இங்குச் சேர்த்ததும்
காவல் நிலையம் கடுகிச் சென்றதும்,
ஏவப் பட்டோர் ஏவியோர் இவர்எனக்
கூறிக் குற்றம் பதிந்ததும் இன்றுஇவ்
வூரெலாம் பேச்சாய் உளதாம்; சாதி
வெறிகொண் டலையும் வீணரால் தூய
அறிவர சிக்கோ உனக்கோ ஆர்இடர்
நேருமோ என்றே நெஞ்சம் கலங்குவன்
ஆருளர் நமக்கே அருந்துணை?" என்னலும்,
அருகில் வந்த அழகன் அன்புடன்
"பெரியீர்! நிலக்கிழார் பெருமாள் அவர்களின்
தங்கை மகன்யான்; தமிழினப் பற்றால்
உங்கள் மகனிடம் உறவு கொண்டவன்;
என்போல் இளையரும் முதியரும் உணர்வால்
ஒன்றியோர் பலர்உளர் உமக்குத் துணையாய்"
என்றழ கப்பன் இயம்பிடப், பெரியவர்
நன்றியோ டவனை நயந்து நோக்கத்
"தந்தையே! குருதியைத் தந்து நும்முயிர்
தந்தவர் இவரே; தமிழின உணர்வால்
ஒன்றிய இவரெனக்கு உற்ற தமையனார்"
என்று மாரி யப்பன் இயம்பிட,
அகம்நிறை காதலால் அழகனை நோக்கி,
"மகனே! வாழ்க; மாரிஉன் இளவல்
துணையாய் அவற்குத் தூயவ தொடர்க" என,
நனைந்த கண்ணராய்ப் பெரியவர் நவில,
வருந்துணை இவன்என மாரியி வரித்த
அருந்துணை அரசி, மருந்துகள் வாங்கி
வந்தவள், அங்கு மாரி யப்பன்
நின்றது கண்டும் மயக்கம் நீங்கிப்
பெரியவர் மீண்டும் பிறந்தது கண்டும்
சிறியவர் திட்டம் சிதைந்த தாலும்
ஆறுதல் அடைந்து, மாரியை, அழகனை
வேறிடம் அழைத்துச் சென்று விளம்பினள்;
"கொல்ல வந்த கோள்இலார் இவர்இவர்
கொல்லத் தூண்டிய கொடியர் இவர்எனக்
குறித்துச் சொல்லியும் குற்றவா ளிகளை
மறித்துத் தளைத்துச் சிறையில் மாட்டும்
கருத்தே இன்றிக் காவல் துறையினர்
இருத்தல் ஏனோ" என்று வியப்பும்
கவலையும் ஒருங்கே காட்டிட, "அரசி !
கவலை வேண்டா; இவ்வூர்க் காவல்
துறையின் பொறுப்பினர் தூய்மையில் மதத்தின்
நெறியே நாடெலாம் நிலைத்திட நினைக்கும்
அமைப்பின் ஆதர வாளர் ஆவர்;
நமைப்போல் வார்க்கு நல்லது செய்யார்;
அதனால் காவலர் ஆதர வைநாம்
எதிர்பா ராமல் என்றும் விழிப்புடன்
நாமே நமக்குக் காவல் ஆகி
ஏமம் சூழ்தலே ஏற்புடைத்(து) என்று
மாரி சொன்னதை அழகனும் அரசியும்
நேரிதாம் என்றே நெஞ்சிற் கொண்டனர்
மருத்துவ மனையில் மாரியின் தந்தையைக்
கருத்துடன் காத்தனர்; கடந்தன சில நாள்;
முழுநலம் பெற்றே முதியவர்
விழுமிய மகனொடும் வீடுசேர்ந் தனரே

Saturday, June 12, 2010

இயல் - 19

குறிச்சியின் எழுச்சி.

ஞாயி றன்று மாரி யப்பன்
காலையில் எழுந்து கடமை உணர்வுடன்
இயக்கம் சார்ந்த இளைஞர் பலரையும்
மயக்கமில் தலைவியாம் வளர்மதி தம்மையும்
ஊர்பொது மன்றில் ஒருங்கு திரட்டிச் 5
"சீர்த்திரு மாறனார் ஆணையை ஏற்றுக்
குன்றுசூழ் குறிச்சிக் கூட்டத் திற்கென
இன்று செல்கிறேன் என்று சொல்லி,
வணங்கத் தக்க வளர்மதி அம்மையை
வணங்கி அவர்தம் வாழ்த்துப் பெற்றுச் 10
சுணங்க லின்றித் தூய மாரியன்
குறிச்சி செல்லக் குறித்து விரைந்தனன்
குறிச்சியில் அழகன் கொள்கை மறவனைக்
கண்டு மகிழ்ந்து கனிவுடன் அழைத்துச்
சென்று விருப்புடன் தேநீர் வழங்கி 15
மேடையில் இருத்தி மாரியின் மேன்மையைக்
கூடியோர் அறியக் கூறத் தொடங்கினன்;
"மானமிகு பெரியீர்! வணக்கம். நமக்கெலாம்
மானமும் அறிவும் வாய்த்திட வேண்டியும்
இனப்பகை அடக்கியும் எழுச்சியைத் தூண்டியும் 20
நினைப்பருந் தொண்டு நிகழ்த்திய பெரியார்
நெறியினைப் பரப்பும் நீள்புகழ் அறிஞராம்
திருமாற னாரின் திருந்திய தலைமையை
ஏற்றே உயர்அறி(வு) இயக்கம் சார்ந்துநாம்
போற்றும் வகையில் பொதுப்பணி யாற்றும் 25
மாண்பினை உடையராம் மாரி யப்பனை
வேண்டினன் வருக என விருப்புடன் வந்தனர்
தாயக மண்ணில் தன்மா னத்துடன்
தூய வாழ்க்கை தொடதற் கியலாச்
சூழலில் பல்வகைத் தொல்லைகள் தொடர 30
வாழும் நமக்கு மாண்உயர் நெறிதனை
வகைபட மொழிகென மாரி யப்பன்
அவர்களை வேண்டுவன் அன்புடன்" என்னலும்,
தந்தை பெரியார் வாழ்க! எனும் முழக்கம்
உந்தலால் மாரி உரைசெயத் தொடங்கினன்; 35
"அறிவுச் செல்வராம் அழகரே! குறிச்சிப்
பெரியீர்! வணக்கம். பெருமைக் குரிய
தந்தை பெரியாரே தமிழ்ப்பா ஙேந்தராய்
வந்தார் எனத்தகு மாண்புடன், பெரியார்
எண்ணிச் சொன்ன பொன்மொழி அனைத்தையும் 40
அன்னைத் தமிழில் அணிநலம் சேர்த்துப்
பாக்களாய் வடித்துப் பாழ்பட்டு நின்ற
மாக்களை அறிவும் மானமும் உடையராய்
ஆக்கிட முனைந்த அறிஞர்; தமிழரைத்
தாக்கிட முனைந்த தறுக்கரைச் சாய்த்தவர்; 45
செந்தமிழ் இளைஞரைச் செதுக்கிய சிற்பி;
இந்திவல் லாண்மையை எதிர்த்து நின்றவர்;
ஆரியம் பரப்பிய அறமிலா நெறிகளை
வேருடன் வீழ்த்திட வீறுகொண் டெழுந்தவர்;
சாதியும் மதங்களும் தமிழ்நெறி இலையெனக் 50
கோதிலாத் தமிழ்நெறிக் குடும்ப விளக்கினை
ஏற்றிக் காட்டிய ஏந்தல்; உரிமை
போற்றுவோர் போற்றப் புரட்சிக் கவியைப்
பேச வைத்துப் பெருமை சேர்த்தவர்;
மாசிலா அழகின் சிரிப்பை வடித்தவர்; 55
பழந்தமிழ் நலத்தைப் பாண்டியன் பரிசாய்
வழங்கிய செந்தமிழ் வள்ளல்; நாட்டில்
நிலவிடும் மடமைநோய் நீக்கிட அறி(வு)எனும்
தலையாய மருந்தினைத் தந்த மருத்துவர்;
பொருந்தா மணத்துடன் புத்திளம் பூவையர் 60
வருந்தச் சுமத்திய மாண்பிலாக் கைம்மை
என்னும் விலங்குகள் இற்றுப் போம்படிப்
பெண்களின் உரிமை பேசிய பெருமையர்;
வந்தவர் ஆளுமை மாய்த்திட இங்குச்
செந்தமிழ் இயக்கம் கண்ட சிறப்பினர்; 65
புதியதோர் உலகம் செய்வதும் கெட்ட
போரிடும் உலகை வேருடன் சாய்ப்பதும்
குறியெனக் கொண்டு குறையிலாத் தமிழில்
அறிவுசால் கவிதைகள் ஆக்கிய அண்ணல்;
இற்றைக் கவிஞர் பலர்க்(கு)இன மானம் 70
கற்றுக் கொடுத்த கவிதை வேந்தர்;
பொருளை உணர்ந்து பொதுவுடைமை பாடிய
புரட்சிக் கவிஞர்; புதுமைப் பாவலர்;
அந்தக் கவிஞர் பெயரால் அமைந்த
மன்றத் தவர்தாம், மயங்கிய தமிழர் 75
விழிப்புறத் தக்கவை விளக்கி உரைக்கென
அழைத்தனர் சொல்வேன்; அறிவுசால் பெரியீர்!
கேளிர் யாவரும்; பிறப்பால் கீழ்மேல்
சூழுதல் தீதெனும் தூய தமிழறம்,
பிறப்பால் வேற்றுமை பேசு கின்ற 80
சிறப்பிலா மதத்தால் சிதைந்ததாம்; இன்று
மேலும் தீமை விளைத்துத் தமிழரைக்
கீழாம் நிலையிற் கிடத்து தற்கும்
ஆற்றி(வு) உடையோர் ஓரினம் என்ற
பேரறம் அழித்துப் பிளவினைச் செய்யவும் 85
திட்ட மிட்டுத் தீயவர் கூட்டம்
வட்டம் அடித்து வருவதை அறிவீர்;
எந்தம் மதமே இணையி லாததும்
இந்த நாட்டிற்(கு) உரியதும் என்பர்;
வருணமும் சாதியும் வாழ்ந்திட விரும்பினும் 90
சரிநிகர் சமமெனத் தத்துவம் பேசுவர்;
மதவா தத்தால் மோதலை வளர்த்தபின்
எதுவும் அறியார் போல இயங்குவர்;
முத்தமிழ்ச் சிறப்பை மூடி மறைத்துச்
செத்த மொழிக்கே சிறப்புத் தேடுவர்; 95
இறைவனைப் போற்றிட இன்றமிழ்க் குரிமை
தருவதை மறுத்துச் சாத்திரம் பேசுவர்;
தொன்மைப் புனைவை உண்மை என்பர்;
உண்மைச் சிறப்பை ஒதுக்கித் தள்ளுவர்
இத்தகு தீயர் இன்றமிழ் நாட்டில் 100
சுற்றி வருவதைப் பற்றிஎண் ணாமல்
நம்மவர் வாழ்வதால் நலங்களை இழந்தோம்
செம்மை இகந்தவர் திளைக்க லாயினர்
பெரியார் தொண்டினால் வந்த பெருமைகள்
சிறியோர் செயலால் சிதைய லாயின 105
மொழியால் தமிழர் இணைந்திடா வாறு
இழிசெய லாளர் இடர்விளைக் கின்றனர்
இந்த நிலைமையால் செந்தமிழ் நாட்டில்
இந்திவல் லாண்மையும் இசையெனில் தெலுங்கும்
தென்றமிழ் இடத்தில் வடமொழி இரைச்சல் 110
நின்று தொடர்வதும் நினையல் வேண்டும்;
தாயை மதிக்கிறோம்; ஆனால் பேசும்
தாய்மொழி மதியாத் தகைமையர் ஆயினம்
பெருஞ்சீர்க் கல்வியில், பேச்சில் எழுத்தில்
விரும்புவம் ஆங்கிலம்; வேறெவர் நாட்டிலும் 115
புன்மை இதுபோல் புகுந்த(து) உண்டோ?
நன்மையோ பெரியீர்! நற்றமிழ் உரிமை
காத்திட முனைதல்நம் கடனே யன்றோ?
தாய்மொழி உரிமை, தாய்மண் உரிமை
ஆய்ந்தும் அறிந்தும் அவற்றினை மீட்டிடத் 120
தக்கன செய்தால் தன்மா னத்துடன்
மிக்கபல் நலங்களும் மேலிட வாழலாம்
பொருளியல் வளங்கள் பொருந்தினும் அடிமை
இருளகன் றாலே ஏற்றமாம்; இதனை
அறிந்து மொழியால் இணைந்தால் மட்டுமே 125
சிறந்த மேனிலை பொருந்தும் அதற்கென
ஆர்த்திட வேண்டும் ஆட்சி யாளர்
ஆணவம் காட்டி அடக்கிட முனைந்தால்
ஆணவம் தொலைக்க அணிவகுத் தெழுந்துநம்
முழுவலி காட்டுவோம்; மூங்கையாய் அவரைத் 130
தொழுதகை மாற்றித் தொடங்கும் அறப்போர்
கொடியவர், என்றும் அடிமையர் விரும்பும்
விடுதலை அதனை விருப்புடன் தாரார்
என்பதை உணர்ந்த ஈழத் தமிழர்
தந்நலஞ் சார்ந்த சாதி சமயப் 135
பிரிவினை தகர்த்துப் பெரும்புகழ்த் தமிழின
உரிமை காத்திட ஓரணி திரண்டனர்
இன்றமிழ் இளைஞரே! பெரியீர்! அவர்தம்
வென்றியை நினைந்து வீறுகொண் டெழுவீர்
நாளை உலகில் நாமும் இங்கு 140
வாழலாம் உரிமை மாண்புடன் மகிழ்ந்து" என
அறிவியக் கத்தின் மாரி யப்பன்
உரிமையின் பெருமை உரைத்திடக் கேட்ட
இளைஞர் பலரும் எழுச்சி பெற்றனர்
தளர்ந்த முதியரும் தளர்ச்சி நீங்கினர் 145
"ஆண்ட தமிழினம் அடிமைப் பட்டு
மாண்டது போதும் மீண்டும் தாயகம்
அனைத்துநல் உரிமையும் அடையும் நோக்கில்
நினைத்(து) அறப்போரைத் தொடர்ந்து நிகழ்த்தலே
தக்க தென்றும் சாதி மதங்களை 150
ஒக்கத் தகர்ப்பதே உகந்த தென்றும்
ஓரின மாக உயர்தமிழ் மொழியால்
சேருதல் ஒன்றே தீய பகைவரை
வெல்லும் வழியாம் வெறுஞ்சொல் நீக்கி
ஒல்லும் வகையால் உரிமைப் போரைத் 155
தொடங்குவோம் நல்வழி சொல்வீர்" என்று
மடங்கல் அன்ன மாரி யப்பனைச்
சூழ்ந்து வேண்டினர்; தூய மாரியும்
ஆய்ந்து நெறிமுறை அறிவித்(து) அழகன்
விருப்புடன் அழைக்கவும் விரைந்தவன் 160
இருப்பிடம் சேர்ந்தனன் எழுச்சியை நினைந்தே

Thursday, June 10, 2010

இயல் - 18

               ஊரைப்பிளக்கும் உரை

'சாதி    தருமமே    தழைத்திடத்    தக்கது
சாதியைக்    காதலால்    சாய்ப்பது    தீது' என
ஆரியம்    காட்டும்    அழிவுக்    கொள்கையே
நேரிதாம்    என்று    நெஞ்சினில்    கொண்டு,
செம்புலப்    பெயல்நீர்    போல    அன்புடை            5
நெஞ்சம்    கலந்திடும்    செந்தமிழ்    நெறியைத்
தீதுஎனச்    சொல்லிச்    சிறுமை    விளைக்கும்
தாதையின்    கொடுமையால்    தளர்ந்து    நின்ற
அரசியின்    நெஞ்சத்(து)    அவலம்,    அழகன்
வரவினால்    மாறிட    மகிழ்ந்தனள்;    தூய            10
காதலை    மாய்க்கும்    கருவிஎன்(று)    எண்ணிய
சாதிக்    காரனே    காதலை    வளர்க்கும்
நண்ப    னாக    மாறி    அவளின்
துன்பம்    துடைக்கத்    துணிந்து    நின்றதால்
உவகையும்    துணிவும்    ஒருங்கே    பெற்றுத்            15
தவறுஇலா    மாரியை    வாழ்க்கைத்    தலைவனாய்
அடைதல்    எளிதே    அறிவியக்    கத்தின்
படையினர்    தாமும்    பக்கம்    நிற்கிறார்
ஆதலால்    எதிர்ப்பினை    அகற்றி    விரைவில்
காதல்    ஒருவனைக்    கூட    லாம்எனும்            20
களிப்புடன்    தந்தையின்    கட்டளை    மீறி
வெளிச்செல    முனைந்த    வேளையில்,    பெருமாள்,
ஆரியக்    கூத்தனின்    அழிவுத்    திட்டமாம்
கூரிலாக்    கருவியைக்    காரிருள்    நெஞ்சினுள்
கரந்து    மகளைக்    கனிவுடன்    நோக்கி,            25
"அறிந்தேன்    மகளே!    அறிவினை    நல்கும்
நூலகம்    செல்கிறாய்    செல்க    கதிரவன்
வீழும்    முன்னம்    வீடு    திரும்புக
கவலை    அகற்றிக்    களிப்புடன்    செல்க
தவறு    செய்யேன்    தந்தைசொல்    நம்புக            30
சென்று    வருக" எனச்    சிரித்த    முகத்துடன்
நின்று    விடுத்தவர்    நெஞ்சினில்,    சீரிய
மாற்றம்    விளைந்ததோ?    மகள்என்    விருப்பம்
போற்றிடும்    எண்ணம்    புகுந்ததோ?    என்று
நினைந்த    வண்ணமும்    காதல்    நினைவில்            35
நனைந்த    வண்ணமும்    நடந்து    சென்று
மாரியைக்    கண்டனள்;    மகிழ்ச்சியில்    திளைத்த
மாரியும்    அரசியை    வருகெனச்    சொல்லி,
அன்னை    தந்தை    ஆயிரு    வர்க்கும்
"என்னை    விரும்பும்    இன்துணை    இவள்" என            40
அறிமுகம்    செய்து    ஆவின்    பாலைப்
பருகுஎனத்    தந்து    பெருகிய    காதலால்
பெற்றோர்    இசைவு    பெற்றபின்    அரசியைக்
கற்புடன்    பார்த்துக்    கண்ணால்    அழைத்து
நாவல்    ஆறு    நோக்கி    நடந்தனன்;            45
காவல்    அவன்எனக்    கருதிய    அரசியும்
தொடர்ந்தனள்    அவனைத்    தூயவன்,    "அரசியே!
நடந்த    எல்லாம்    நவில்க"    எனத் தந்தை
அழகனைக்    கண்டதும்    அவன்இங்கு    வந்த்தும்
உளம்நிறை    காதலை    உயர்ந்தவ    னிடத்தில்            50
எடுத்துச்    சொன்னதும்    ஏற்றுக்    கொண்டதும்
கடுத்துப்    பேசிக்    காதலை    மறுத்த
தாதையை    எதிர்த்துத்    தகவுடை    அழகன்,
சாதியை    மறந்து    காதலை    வாழ்த்தலே
நன்றெனச்    சொன்னதும்    நயம்இல    பேசித்            55
தந்தையார்    அழகனைச்    சாடி    விடுத்தபின்
அய்யரைக்    கண்டு    திரும்பிய    தந்தை
மெய்ம்மை    அன்பு    மேவிடப்    பேசி,
"மகளே!    சென்று    வருக" என    விடுத்த
தகவும்    அரசி    சாற்றிடக்    கேட்டு,            60
மாரி    மொழிந்தனன்;    "நுந்தையின்    மாற்றம்
நேரிது    என்றுநான்    நினைத்திட    வில்லை
சாதித்    தளையைத்    தகர்க்கும்    காதலை
மோதி    அழிக்க    முனைவதும்    முனைப்புத்
தளர    நேர்ந்தால்    சார்ந்து    நின்று            65
வளர    விடாமல்    மாய்ப்பதும்    ஆகிய
திறம்எலாம்    அய்யரே    தீதுநன்(று)    அறியா
ஒருவராம்    உந்தைக்(கு)    உரைத்து,    நமக்கெதிர்
இயங்கு    மாறு    இயக்கி    வருகிறார்;
உயங்குதல்    வேண்டா;    ஒன்றிய    நமக்குத்            70
திருமாற    னாரும்    சீர்சால்    இயக்கமும்
உறுதுணை;    மேலும்    உன்அத்    தானும்
என்னைக்    கண்டு    தன்னிலை    விளக்கி
'என்றும்    துணையாய்    இருப்பேன்'    என்றனர்;
நீயே    என்துணை    யான்உன்    துணைஎன            75
ஆயினும்;    இதனை    அறிந்தனர்    பலரும்;
பொறையும்    அறிவும்    பொருந்தி    நின்றிடின்
குறையிலா    வெற்றி    குறுகும்;    சிறிதும்
குழப்பம்    இன்றிக்    கொண்ட    காதலின்
விழுப்பம்    எண்ணி    விழிப்புடன்    இருப்போம்"            80
என்று    மாரி    இயம்பிட    அரசி,
"நன்று    பொழுதும்    நகர்ந்த(து);    எதிர்வரும்
ஞாயிறு    மாலை    மீண்டும்    கூடுவம்  
தூயவ ரே"    எனத்    "தூயவ ளே!    நான்
குறிச்சியில்    நடைபெறும்    கூட்டத்    திற்குச்            85
சிறப்புரை    ஆற்றச்    சென்று,    தங்கித்
திங்கள்    திரும்புவேன்;    திங்கள்    மாலை
இங்கே    மீண்டும்    இருவரும்    வருகுவம்"
என்று    சொல்லிச்    சென்று    வருக என,
ஒன்றிய    மாரி    உரைத்தனன்;    அரசியும்            90
எண்ணம்    மாரிபால்    இருத்தி    மண்ணில்
கண்ணைப்    பதித்துக்    காலால்    நடந்தனள்
உள்ளம்    அரசிபின்    ஓட    விட்டு
மெல்ல    மாரியும்    நடந்தனன்;    அவனை
நெருங்கி    வந்து    நின்ற    ஒருவன்            95
சுருங்கிய    நோக்குடன்,    "சொல்லடா    தீய
சேரியன்    தானே     நீ" என    வினவச்
"சேரியன்    உண்மை    தீயவன்    அல்லேன்"
என்று    மாரி    இயம்பக்    கேட்டுக்
கன்றிய    கயவன்    கள்வெறி    மீதுற            100
முயர்ந்த    சாதியள்    ஒருத்தி    யுடனெநீ
மறைந்து    பேசி    மகிழ்தல்    தகுமோ?
இழிந்த    சாதியன்    உயர்ந்த    எமக்கெதிர்
எழுந்து    மோதிட    எண்ணமோ?    சொல் என
"யாரினும்    இழிந்தவன்?    நும்மினும்    எனினே            105
வேறுள    சிலரின்    நீயிர்    இழந்தவர்
என்பதும்    உண்மை    ஏற்பீர்    ஆயினும்
என்னிலை    பிறப்பால்    இழிந்த    தென்பதை
ஒப்பிடேன்"    என்று    மாரி    உரைக்கவும்
"எப்படி    என்னை    இழிந்தவ    னாகச்            110
சொல்வாய்    உன்னைக்    கொல்வேன்"    என்று
பல்லைக்    கடித்து    மாரியைப்    பற்றவும்
ஓடி    வந்த    மாரியின்    உறவினன்
சாடினன்    அந்தச்    சாதி    வெறியனைத்
தள்ளாடி    நின்றஅச்    சழக்கன்    தீய            115
கள்ளின்    வெறியுடன்    கனன்று    நோக்கி
"என்னைத்    தாக்கி    இழிவு    செய்தனை
உன்னைக்    கொல்லா(து)    ஒழியேன்    உன்றன்
சேரியும்    விரைவில்    தீக்கிரை    யாகும்
மாரிமேல்    ஆணை    வைத்தேன்"    என்று            120
குழறிச்    சென்றனன்    கொடியோன்    அந்த
மாரி    யம்மை    அறிவளோ
ஊரைப்    பிளக்கும்    உரையீ    தென்றே.

Tuesday, June 8, 2010

இயல் - 17

                      வாழ்த்த வந்தேன்
முறைப்பெண்    அரசியின்    முறைசார்    காதல்
விருப்பம்    அறிந்து    விளக்கம்    பெற்றபின்
இருவர்    உள்ளமும்    இணைவதே    காதல்
ஒருதலைக்    காதல்    உயர்வா    காதென
அறிந்தவன்    ஆகலின்,    அழகன்    தன்னுளம்            5
செறிந்த    காதலைத்    தீர்த்தனன்;    அரசியின்   
உள்ளம்    கவர்ந்த    ஒருவன்,    உயர்நெறி
செல்லும்    இயல்பினன்,    செந்தமிழ்    ஆர்வலன்,
மன்பதை    காக்கும்    மரபினில்    என்றும்
தன்னலந்    துறந்து    தளரா(து)    உழைப்பவன்,            10
ஆதலால்    அவனே    அம்மான்    மகளைக்
காதலால்    மணந்து    கைப்பிடித்    தற்குப்
பெரிதும்    தகுதி    பெற்றவன்;    அவனை
உரிமை    உறவுடன்    உடனே    கண்டு
பேசுதல்    நன்றெனப்    பெருந்தகை    அழகன்            15
மாசிலா    மாரி    வாழிடம்    சேர்ந்தனன்;
ஆங்கவற்    கண்ட    அழகன்,    தன்னைப்
பாங்குடன்    அறிமுகப்    படுத்திக்    கொண்டனன்,
அகம்மலி    உவகையன்    ஆகி    மாரியும்
"அகத்தினுள்    வருக" என    அழைத்துச்    சென்று            20
பழமும்    பாலும்    பண்புடன்    அளித்தனன்
அழகன்,    மாரியை    ஆர்வமாய்    நோக்கி,
"அன்பரே!    நும்மை    அறிந்தவர்    சொல்ல
முன்பே    அறிவேன்    ஆயினும்    இன்றென்
அம்மான்    மகளாம்    அரசி    வாயிலாய்            25
உம்மை    முழுமையாய்    உணர்ந்தேன்;    என்றன்
நெஞ்சில்    அவளை    மணக்கும்    நினைவு
கொஞ்சம்    இருந்தது;    கொள்கை    வழியால்
நீயிர்    இருவரும்    நெருங்கி    நிற்பதும்
தீயரை    எதிர்த்துத்    தெளிந்த    காதலால்            30
இணைந்திட    உறுதி    ஏற்றி    ருப்பதும்
அறிந்தபின்    அரசியை    அடையும்    ஆசை
துறந்தேன்;    அறிவைத்    துறந்த    மாமனை
மறந்தேன்    உண்மைந    மகிழ்ந்துநும்    காதலை
வாழ்த்திச்    செல்லவே    வந்தேன்;    உம்மை            35
வீழ்த்தஎன்    மாமன்    விரிக்கிறார்    வலையைச்
சூழ்ச்சி    எதனையும்    தொலைப்பதும்    உம்மைக்
காத்து    நிற்பதும்    கடனாக்    கொண்டேன்"
என்றழ    கப்பன்    இயம்பிடக்    கேட்டு
நன்றி    சொல்ல,    அஞ்சலாள்    வந்து            40
கொடுத்த    மடலை    விரித்து    மாரி
படித்தனன்;    "பைந்தமிழ்    அன்பரீர்!    வணக்கம்
பகுத்தறி    வாளராம்    மக்கள்    பலர்க்கும்
வகுத்த    உரிமைகள்    வாய்த்திடல்    நன்றாம்
இயற்கை    உரிமைகள்    பலவும்    இழந்து            45
செயற்கைத்    தீமையால்    சீரழி    வுற்று
வாழுந்    தமிழரைக்    காத்து    வளர்க்கும்
கோளுடன்    ஊர்தொறும்    கூட்டம்    நிகழ்த்துக"
என்ற    கட்டளை    மடலை    ஏந்தி
நின்ற    மாரி    யப்பனை    நெருங்கி            50
"ஆரிஃ(து)    அனுப்பினர்?"    என்றழ    கப்பன்
ஆர்வமாய்    வினவ,    "அறிவியக்    கத்தின்
தலைவராம்    மாறனார்    தாமிஃ(து)    அனுப்பினர்
உலைந்த    தமிழரின்    உரிமை    காக்கவே"
என்று    மாரி    இயம்பிட,    அழகனும்            55
"நன்றே    எதிர்வரும்    ஞாயி    றன்று
குறிச்சியில்    கூட்டம்    சிறப்புடன்    கூட்டுவேன்;
நீவீர்    சிறப்புரை    நிகழ்த்துக"    என்றே
ஆவல்    மீதுற    அழகன்    வேண்டலும்   
"நன்று    நன்று    வருகிறேன்    நும்மூர்"             60
என்று    மாரி    இசைவு    நல்கி
உளம்நிறை    அன்புடன்    ஊர்செல
அழகனை    மாரி    அனுப்பினன்    உவந்தே       

இயல் - 16

                         வருண தருமம் வளைந்தது

எப்படிப்    பார்ப்பினும்    இழிந்த    தாய
ஒப்பில்    லாமையே    உயர்ந்ததென்(று)    உரைக்கும்
வடவா    ரியத்தை    வணங்கி    ஏற்று,
மடமையை    நாட்டில்    வளர்க்குந்    தீயருள்
நிலக்கிழார்    பெருமாள்    நிகரிலார்;    ஆதலால்            5
விலக்கத்    தக்கதும்    வேண்டத்    தகாததும்
தாழ்ந்ததும்    ஆகிய    சாதித்    தீமைதான்
வீழ்ந்திடா    வண்ணம்    விளங்கிடச்    செய்வதே
கடன்எனக்    கருதியும்    மடமையைப்    பிறர்க்கே
உடைமை    ஆக்கியும்    உவக்குநர்    ஆகிய            10
அனந்த    ராமனை    அடைந்து,    மருகனை
நினைத்\\ந்து    சென்றதும்    அவன்இவண்    வந்ததும்
சாதிகள்    இல்லை    காதலே    பெரிதென
நீதி    சொன்னதும்    நிரலாய்ச்    சொல்ல,
"அன்றுநீ    வந்து    சென்ற    பிறகுநின்            15
தங்கை    மகனது    ஜாதகம்    பார்த்து,
நேற்றே    நினைத்தேன்    நிகழுமிப்    படியென
மாற்ற    முடியுமோ    மகேசன்    எழுத்தை?
ஒருமகள்    ராணிக்(கு)    உயர்ந்த    ஜாதகம்
மருமகன்    ஜாதகம்    பாப    ஜாதகம்            20
ஆயுசும்    குறைவு    அதனால்    அவனை
நீயும்    வெறுத்து    நிற்பதே    முறையாம்
பகவான்    செயலால்    பத்துமா    தத்தில்
மகளுக்    குரியவன்    வருவான்    பகவத்
பிரீதி    யாகப்    பிராமணாள்    பதின்மர்க்(கு)        25
உரியவை    செய்க" என    அய்யர்    உரைக்கவும்
"செய்கிறேன்    சாமி    தீயனை    மறந்து
மெய்வகை    என்மகள்    மீண்டிட    என்றன்
பண்ணையில்    வேலை    பார்ப்பவன்;    நாளெல்லாம்
சொன்னதைச்    செய்பவன்;    தொழுதே    நிற்பவன்;            30
மனைவி    இழந்தவன்;    வயது    நாற்பதே;
எனது    சாதியன்;    என்மகள்    கழுத்தில்
அவனைத்    தாலி    அணியச்    செய்தால்
தவறோ    சாமி?    சாற்றுக"    என்றே
பெருமாள்    வினவப்    பிழைநெறி    காட்டும்            35
ஒருவராம்    அனந்த    ராமன்    உரைத்தனர்;
"ஜாதி    யில்லை    சாமி    யில்லை
நீதி    யில்லை    நியமம்    ஏதும்
இல்லை    இல்லை    என்றும்    வேதம்
சொல்வ    தெல்லாம்    மறுத்தும்    நிற்கும்            40
பொல்லா    தவர்கள்    பூமியில்    சிலர்தாம்
செல்வாக்    குடனே    திரியுமிந்    நாளில்
ஜாதி    தர்மம்    காத்திடத்    துடிக்கும்
நீதிமான்    சிலரும்    நின்போல்    உலகில்
இருப்பதால்    மட்டுமே    இங்கு    மழையைத்        45
தருகிறான்    பகவான்;    தர்ம்மே    என்றும்
வெல்லு    மாயினும்    பொல்லா    தாரின்
செல்வாக்    கின்று    சிறந்து    நிற்பதால்
வற்புறுத்    தாதே    மகளைச்    சிலநாள்
விட்டுப்    பிடிப்பதே    விவேக    மாகும்;            50
அறிவிலார்    எல்லாம்    அறிவியக்    கம்என
நெறிமுறை    யின்றிப்    பிழைபுரி    கின்றனர்;
பிழைசெய்    பலரும்உன்    பெண்ணுக்    காகக்
குழுமிப்    பெரிய    கூட்டமாய்    வருவர்;
திட்டம்    இன்றிநீ    செயல்படின்    உன்றன்            55
கட்டளை    மீறிக்    கயவர்    துணையுடன்
ஓடிப்    போகவும்    கூடும்;    பின்னர்
வாடிப்    பயனிலை    வருந்திப்    பயனிலை;
ஆதலால்    ஏதும்    அறியா    தவன்போல்
காதலுக்(கு)    எதிராய்க்    கபடமாய்    நீதான்            60
நாடகம்    ஆடுக;    நாயினும்    இழிந்த
மூடனை    உன்மகள்    முனிந்திட    ஒருவழி
எண்ணி    உரைப்பேன்    ஏற்றுச்    செய்க;
பின்னர்    உனக்கொரு    பீழை    வராது;
மனம்போல்    மகளை    மணவினைப்    படுத்தியும்            65
முனம்போல்    ஜாதி    முறைமை    பேணியும்
வாழலாம்    சொன்னதை    மனதில்    வைக்க
சூழேல்    பிறவினை"    என்று    சொல்லிப்
போஎனப்    பெருமாள்    போக்கிய    பின்னர்
வாஎன    வந்த    மனைவியை    நோக்கி,            70
"மதுரை    சென்றனை    மகளைப்    பார்க்கப்
புதுமை    உண்டோ?    புகல்க"    என்னலும்
"பொல்லாங்(கு)    உண்டுநும்    புத்திரி    ஒருவனைக்
கல்யாணம்    செய்தனள்    கழிசடை;    நீரோ
ஊரா    னுக்குப    தேசம்    செய்து            75
நேரம்    போக்கி    நிற்கிறீர்;    ஜாதி
தருமம்    காக்கத்    தகுவழி    யொன்றைப்
பெருமா    ளுக்குப்    பெரிதாய்ச்    சொன்னீர்;
தரும    நியாயம்    மறந்து    நம்மகள்
மறவன்    ஒருவன்    மனைவி    ஆயினள்;            80
அத்தை    என்றெனை    அழைக்கிறான்    அந்தக்
கட்டையில்    போவான்    கர்மம்    கர்மம்;
பாங்கியில்    பெரிய    பதவியில்    இருக்கிறான்
வாங்கும்    பணத்தால்    வசதியாய்    இருக்கிறான்
பொண்ணுக்(கு)    அவனும்    பொருத்தமாய்    இருக்கிறான்        85
என்ன    இருந்தும்    இழிந்த    சூத்ரன்
அவன்நம்    மருகன்    ஆனது    தகுமோ?
எவரும்    நம்மவர்    ஏற்பரோ    இதனை?
பெற்றவள்    சொல்லிப்    பிதற்று    கின்றேன்
வெற்றிலை    மென்று    விட்டம்    நோக்கி            90
எதுவும்    பேசா    திருக்கின்    றீரே
இதுதான்    பதிலோ?    இயம்புவீர்"    என்ற
ஆம்படை    யாளை    அமைதிப்    படுத்தி,
"ஏன்பதைக்    கின்றாய்?    ஏற்றநம்    சனாதன
தருமத்    திற்குத்    தாழ்வென    எண்ணிப்            95
பொருமு    கின்றாய்    புரியா    தவளே
கோத்திரம்    பார்த்துக்    குலமும்    பார்த்து
சாஸ்திரம்    பார்த்து    ஜாதகம்    பார்த்து
மகளுக்    கேற்ற    வரனைத்    தேடிப்
பகலும்    இரவும்    பலப்பல    ஊர்களில்            100
அலைந்தேன்    பலரை    அணுகினேன்;    நமது
குலத்தினர்,    மகளைக்    கொள்ள    வில்லை;
வரதட்    சணையும்    சீரு    மாக
ஒருலட்    சம்வரை    உம்மிடம்    இருந்தால்
பேசுக    இன்றேல்    பேசா(து)    எழுகெனக்            105
கூசுதல்    இன்றிக்    கூறினர்    என்பதும்
ஏலா    மையினால்    என்செய்    வதென
நாளும்    எண்ணி    நலிந்தோம்    என்பதும்
இருபதைத்    தாண்டி    ஒருபது    வயதை
நெருங்கினள்    மகள்என    நினைந்து    நினைந்து            110
வருந்தி    நின்றோம்    என்பதும்    நீதான்
அறிந்தவள்    அன்றோ?    அறிந்தும்    அவள்ஒரு
வரனைத்    தானே    வரித்துக்    கொண்டது
முறையோ    என்று    முறையிடல்    ஏனோ?
வருண    தர்மம்    வளைந்த    தாயினும்            115
மருகன்    சூத்ர    மறவன்    ஆயினும்
பெண்ணை    நன்கு    பேணுவன்    ஆயின்
எண்ணி    வருந்த    இடமிலை;    மேலும்
சூத்ரன்    ஒருவனைத்    தொடர்ந்து    நம்மவள்
வேற்றிடம்    சென்றதில்    வேதனை    யில்லை,            120
ஆத்துக்    காரியாய்ச்    சூத்ரப்    பெண்ணை
ஆக்கி    நம்மவன்    அக்ரகா    ரத்துள்
கொண்டு    வருவதே    கொடுமை;    அதனை
என்றும்    நம்மவர்    ஏற்றுக்    கொள்ளார்;
மறவ    னோடு    மகள்வா    ழட்டும்            125
உறவு    சொல்லி    உரிமையால்    அவனை
வரவழைக்    காமல்    மாதம்    ஒருமுறை
இருவரும்    அவ்விடம்    இணைந்தே    சென்று
வருவோம்    கவலையை    மாற்றுக"    என்றனர்
வருண    தருமம்    வளர்க்க    உழைக்கும்        130
அனந்தன்;    அவர்மனை    யாட்டியும்
நினைந்தே    ஏற்றனள்    நேரிதாம்    என்றே.

Monday, June 7, 2010

இயல் - 15

               அம்மானுக்கு அறிவுரை
அன்னையை    ஈரைந்(து)    அகவை    நிறையும்
முன்னரே    இழந்தவள்    முதிர்ச்சி    இலாதாள்
பிள்ளைப்    பருவப்    பேதை    அவள்தான்
உள்ளக்    கவலை    உறுதலா    காதென
நாளும்    நாளும்    மகள்நலம்    கருதிப்                                     5
பேணிப்    பேணி    வளர்த்தனர்    பெருமாள்.
கேட்ட    தெல்லாம்    வீட்டில்    நிறைத்தார்
துள்ளித்    திரிந்தவள்    சொன்னதைக்    கேட்டுயர்
பள்ளிக்    கனுப்பினர்    மேலும்    படிக்க
விழைந்தன    ளென்றே    விளைந்த    அன்பினால்            10
கலைக்கல்    லூரிக்(கு)    அனுப்பி    வைத்தனர்;
இன்றும்    மகள்பால்    இயைந்த    அன்பு
குன்றிட    வில்லை    என்பதே    உண்மை;
ஆயினும்    சாதி    அமைப்பால்    தொற்றிய
நோயின்    கடுமை,    நோயிலா    மகள்பால்                         15
கொண்ட    அன்பினும்    கூடுத    லாக
நின்றதால்    மகள்நலம்    நினையா    ராயினர்;
மகளின்    விருப்பை    மதிப்பதோ?    பலரும்
தகவெனச்    சொல்லும்    சாதியைக்    காப்பதோ?
என்ற    வினாவை    எழுப்பிய    பெருமாள்                           20
குன்றிய    அறிவால்    கொள்கைப்    பிணியால்
உயர்ந்த்து    சாதியே    ஒருமகள்    காதலால்
உயர்வு    சிதையும்    உறுதியாய்    என்றே
மாரியைச்    சேரியன்    என்று    மறுத்தயல்
ஊரின்ன்    சாதியால்    உறவின்ன்    ஆகிய                         25
அழகனுக்(கு)    அவளைத்    துணையென    ஆக்குதல்
அழகே    என்னும்    அறமிலா    முடிவை
உறுதிப்    படுத்திய    பின்னர்    இறுதியாய்
அறுதியிட்(டு)    உரைசெய    அழைத்தனர்    மகளை
"மகளே !    உனைஎன்    மருகன்    அழகன்                        30
திகழ்நன்    னாளில்    திருமணம்    செய்திட
ஒப்பினன்;    நேற்றவன்    ஒப்புதல்    பெற்றேன்;
எப்படி    யேனும்உன்    இசைவில்    லாமலும்
நன்மணம்    விரைவில்    நடக்கும்;    அய்யரை
இன்னே    காண்பேன்    ஏற்றநாள்    அறிந்து                    35
விரைவினில்    வருவேன்    வீட்டில்    இரு" என
பெருமாள்    சென்றனர்.    பிழையிலா    அரசியும்
காதல்    இலாமல்    ஒருவரை    ஏற்றுக்  
காதல்கொள்    ஒருவரைக்    கைவிடல்    கூடுமோ?
இயற்கைப்    புணர்ச்சியால்    இயன்ற    காதலைச்            40
செயற்கையாய்    வந்து    சீரழிக்    கின்ற
சாதியைக்    காக்கச்    சாக    விடுதல்
நீதியோ?    என்று    நினைத்துக்    கலங்கி
ஆறுதல்    தந்தெனை    அரவணைப்    பார்தாம்
ஆர்உளர்    என்றவள்    அலமந்த    வேளையில்            45
அம்மான்    பேச்சில்    அய்யற(வு)    உற்ற
செம்மையன்    அழகன்    சேர்ந்தனன்    ஆங்கே
தாயென    அரசியைத்    தாங்கும்    சின்னத்
தாயவள்    கண்டு,    தனியறை    யகத்துள்
வாடிக்    கிடந்த    மலரிடம்,    "அத்தான்            50
தேடி    வந்துளார்    தெளிவு    பெறுக" என
முத்துக்    கள்தமை    முகத்தின்    `அகற்றி
உற்ற    கவலையை    உள்ளத்    தடக்கி
வந்தவள்,    "அத்தான்    வருக" என,    அவள்தான்
நொந்தனள்    போலும்;    நோயினள்    போலும்;            55
நெஞ்சில்    அவலமே    நிறைந்தது    போலும்
வஞ்சி    அவட்கு    வருத்தம்    எதனால்
என்பதை    அறிய    எண்ணின    னாகி
நன்றே    நினைந்து    நயந்து    வினவினள்;
"இராணிஉன்    முகத்தில்    துயரம்    ஏனோ?            60
பேணிய    தந்தை    பிழைசெய்    தனரோ?
நெருநல்    மாமன்    நேரில்    வந்து  
திருமணம்    பேசினர்    விரைவினில்    மணநாள்
சொல்வேன்    என்று    சொல்லி    வந்தனர்  
நல்லதே    என்று    நானுளம்    மகிழ்ந்தேன்            65
முன்னர்    ஒருநாள்    உன்னை    விரும்பிய
என்னைத்    தகுதி    இலான்என்    றிகழ்ந்த(து)
எண்ணிய    என்னுள்    எழுந்த(து)    அய்யம்
உண்மை    அறியவே    வந்தேன்    உரைக்க" என,
                                   
                                           (வேறு)

"என்னை    விரும்பினீர்    பிழையிலை    என்விருப்பம்
இன்னொருவர்    பாலிருக்க    எந்தைஅஃ(து)    ஏலாமல்
என்னை    உமக்களித்தால்    ஏற்பீரோ?    ஏற்பிரேல்
முன்னைத்    தமிழறந்தான்    முற்றாய்    அழியாதோ?

என்சாதி    உயர்ந்த்துவாம்    என்னுளம்    கவர்ந்தவர்
தன்சாதி    தாழ்ந்ததாம்    தந்தை    உரைக்கின்றார்
புன்சாதி    காப்பதற்கே    நெஞ்சம்    பொருந்திநிற்கும்
என்காதல்    மாய்க்கின்றார்    இக்கொடுமை    ஏற்பீரோ?

உயர்ந்த    பகுத்தறிவும்    இனநலமும்    பேணுகின்ற
உயர்ந்தவரைப்    பிறப்பாலே    தாழ்ந்தவர்தாம்    என்கிறார்
உயர்காதல்    வீழ்த்திடவே    உமைக்கருவி    ஆக்குகிறார்
உயர்வோநீர்    ஒத்துழைத்தல்?    உண்மை    உரைப்பீரோ?

காதலை    அழிப்பரேல்    காதலொடு    நான்அழிவேன்
காதலொடு    நான்அழியக்    கருவிஎன    ஆவீரோ?
சாதிகளை    வாழவைக்கும்    தந்நலத்தார்,    தகுதியுள்ள
காதலை    வீழ்த்துகின்ற    கயமையினை    ஏற்பீரோ?"
                                           
                                                     (வேறு)

இன்னவா(று)    அரசி    தன்னிலை    விளக்கிச்            70
சொன்னது    கேட்டுத்    தூயவன்    சொன்னான்;
"அன்றுனை    விரும்பினேன்;    அறமெனக்    கருதினேன்;
இன்றுநீ    உன்னிலை    இயம்பிய    பின்னரும்
உன்னை    விரும்புவ    தாக    உரைத்திடும்
இன்னாச்    சிறுமை    என்பால்    இல்லை;            75
மகளைப்    போற்றலும்    மகளின்    மேலாய்த்
தகுதியைப்    போற்றலும்    தகுதியின்    உயர்வெனச்
சாதியைப்    போற்றலும்    சாதியைச்    சொல்லிக்  
காதலைக்    கோறலும்    காதலைக்    கொல்ல
எம்முடி    வேனும்    ஏற்கத்    துடிக்கிறார்            80
அம்மான்    என்பதை    அறிந்தேன்;    யானோ
செந்தமிழ்    அறமுணர்    திறத்தினேன்    ஆதலால்
எந்த    நிலையிலும்    இயற்கையின்    இயன்ற
உன்பெருங்    காதற்(கு)    ஊறு    செய்யேன்;
என்னரும்    மாம    னிடத்தும்    உன்னிலைக்கு             85
ஆதர    வாகப்    பேசுவேன்;    அவர்உன்
காதலை    மறுத்துக்    கடுஞ்சொற்    கூறிடின்
அவரை    எதிர்ப்பேன்;    அவருடன்    நிற்கும்  
எவரையும்    எதிர்ப்பேன்;    இருவீர்    தமையும்
இணைப்பேன்    உறுதி;    இனியவ    ளேநீ             90
துணையெனக்    கண்ட    தூயவர்    யாவர்?
விரும்பினால்    சொல்க" என,    விரைந்த    காற்றினால்
கருமுகில்    விலகிய    கதிரொளி    நிலவென
விளங்கிய    முகத்தினள்    விருப்பம்    மீதுற,
"உளங்கவர்    தலைவர்இவ்    வூரினர்;    தமிழின             95
நலமே    விரும்பியும்,    நலம்பெறத்    தடையென
நிலவும்    சாதி    மதங்களைச்    சாடியும்
அறிவு    புகட்டி    அரும்பணி    யாற்றிடும்
திருமாற    னாரொடு    சேர்ந்து    பழகியும்
வாழ்ந்து    வருபவர்;    மடமை    யாளரால்                       100
தாழ்ந்த    பிறப்பெனச்    சாற்றப்    படுபவர்
மாரி    யப்பன்    அவர்பெயர்"    என்னலும்
"மாரி    யப்பனோ!    மகிழ்ச்சி;    அவர்தமை
நேரில்    அறிந்திலேன்;    நிறைகுடம்    என அவர்
சீரினைப்    பிறர்சொலத்    தெளிவாய்    அறிந்துளேன்;            105
அறிவியக்    கத்தின்    அருந்துணை    ஆய
இருஙரும்    வாழ்வில்    இணைதல்    ஏற்றதே;
மாரி    யப்பனை    மாலையிற்    கண்டு
கூறுவன்    வாழ்த்(து) எனக்    கூறினன்    அழகன்.
திரும்பி    வந்த    பெருமாள்,    மருகனை            110
விரும்பி    நோக்கி,    விருப்புடன்    மகளையும்
கண்டு,    நெஞ்சில்    கலக்கமும்    மகிழ்வும்
கொண்டு    மகளைக்    கூர்ந்து    நோக்கி,
"அன்புறு    பகளே    அத்தா    னுக்குத்
தண்பண்    டங்களும்    தீஞ்சுவை    நீரும்            115
தந்தனையோ?"    எனத்    தருவேன்    என்று
சென்றனள்,    "மருக !    திருமண    நாளை
அறிந்திட    விரும்பி    அய்யரைக்    காண
விரைந்தேன்    அவர்தாம்    வீட்டில்    இல்லை.
வந்ததும்    சென்று    மணநாள்    அறிந்து           120
வந்து    சொல்வேன்    மற்றது    வரையில்
இருந்து    செல்க"    என இயம்பி,    "இராணிபால்
கலந்துரை    யாடினை;    கருத்தால்    இசைந்து
மகிழ்தன    ளோ? என,    வந்த    மகளும்
"மகிழ்ந்தேன்,    அத்தான்    வருகையால்"    என்றனள்.          125
"எனக்கும்    மகிழ்ச்சியே    இன்று    வராவிடின்
நினைப்பருந்    தீமை    நிகழ்ந்தே    இருக்கும்"
என்றழ    கப்பன்    இயம்பிடக்    கேட்டு
"நன்றே    நடக்க    நானிருக்    குங்கால்
தீமை    என்" எனத்    திகைத்தே    வினவ,          130
"மாமா!    சொல்வேன்    மகளும்    விரும்பினால்
மறுப்பிலை    அவளை    மணக்க    என்றேன்;
விருப்பம்    மகட்கும்    இருப்பது    போலச்
சுருக்கமாய்ச்    சொன்னீர்;    சொன்ன(து)    உண்மையொ?
விரும்பினேன்    இராணியை;    வேறொரு    வரையிவள்         135
விரும்புதல்    இன்று    விளம்பிடக்    கேட்டேன்
ஒருமகள்    விருப்பமே    உயர்வெனக்    கொண்டு
திருமணம்    நிகழ்த்திச்    சிறப்பினைப்    பெறுக;
மறுப்பிரேல்    தீமை    வந்தே    தீரும்"
இன்னவாறு    அழகன்    இயம்பிடக்    கேட்டவர்,        140
"என்னடா    சொல்கிறாய்?    இழிந்த    பிறப்பினன்,
சேரியன்,    அந்த்த்    தீயவ    னுக்கோ
ஊரினில்    தகுதியால்    உயர்ந்த    என்னை
மாமனாய்    ஆக    வழியுரைக்    கின்றாய்?
மாம    னிடத்தில்    மானம்    உள்ள        145
மருகன்    பேச்சோ?    மடையன்    பேச்சோ?
தருகிறேன்    பெண்ணைத்    தகுதிக்    குறைவும்
பெரிதலை    என்றும்    சாதியே    பெரிதெனக்
கருதியும்    உன்னைக்    கண்டு    பேசினேன்
உனக்கு    விருப்பம்    இல்லையேல்    உரைக்க;         150
எனக்கு    தெரியும்    எல்லாம்;    எனக்கே
அறிவுரை    சொல்வையோ?    ஆணவ    மோ? என
நெறிமுறை    பிறழ்ந்து    நீடு    பேசலும்
"சேரியன்    என்றும்    தீயவன்    என்றும்
கூறுதல்    முறையோ?    கூறுக"    என்றவன்        155
மொழிந்தது    கேட்க    விழைந்தில    ராகி
"ஒழிகநீ    எனக்கும்    உனக்கும்    இன்றுடன்
அறுந்தது    உறவு" என    அறைந்தது    கேட்டுத்
"திருந்திட    மாட்டீர்;    நுமைத்திருத்    தாமல்
இருந்திட    மாட்டார்    அறிவியக்    கத்தார்;        160
திருந்திய    நும்மை    இராணியின்    திருமண
விழாவிற்    காண்பேன்    இராணி! நீ
அழாதே"    என்றவன்    அகன்றனன்    விரைந்தே.